Skip to main content

“சிவசேனாவை அபகரித்தவர்களை அரசியல் ரீதியாக படுகொலை செய்வோம்” - உத்தவ் தாக்கரே ஆவேசம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Uddhav Thackeray obsession who usurped Shiv Sena

மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிடப்பட்டது.

இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், தகுதி நீக்கம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, 'ஒரு கட்சித் தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது எனத் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று (23-01-24) நாசிக் பகுதியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வானர மன்னன் வாலியை ராமர் ஏன் கொன்றார் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். நமது சிவசேனாவை அபகரித்த வாலியையும் நாம் அரசியல் ரீதியாக கொல்ல வேண்டும். சிவசேனாவுடன் தப்பிச் சென்ற துரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்ய தொண்டர்களாகிய நீங்கள் சபதம் எடுக்க வேண்டும். சிவசேனாவை அபகரித்தவர்கள், காவிக் கொடியை காட்டி ஏமாற்றியவர்கள் மற்றும் அவர்களின் எஜமானர்கள் அனைவரையும் நிச்சயமாக அரசியல் ரீதியாகப் படுகொலை செய்வோம். ராமரின் முகமூடிகளை அணிந்த ராவணன் முகத்திரையை எங்களது கட்சித் தொண்டர்கள் கிழிப்பார்கள். 

Uddhav Thackeray obsession who usurped Shiv Sena

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிவசேனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால், சிவசேனா தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. இந்த நிலையை அடைய உதவிய சிவசேனா தொண்டர்களை பிரதமர் மோடி மறந்துவிட்டார். கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸை பார்த்து பா.ஜ.க.வினர் கேட்கின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க என்ன செய்தது?

முதல் 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றினார். அந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் அயோத்திக்கு ஒருமுறை கூட செல்லவில்லை. பா.ஜ.க.வின் மோசடிகளின் ஆதாரமாக இருக்கும் ‘பி.எம்.கேர்’ நிதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக விசாரணை நடத்தி அவர்களை சிறைக்கு அனுப்புவோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம்? - சிவசேனா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
BJP Chaos in alliances; Shiv Sena MLA Allegation sensational

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

மேலும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

தேசியவாத காங்கிரசை உடைத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த அஜித் பவார் தரப்புக்கும் சொற்ப தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதாவது 18 மக்களவைத் தொகுதிகளைக் கேட்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க பா.ஜ.க. முன்வந்திருப்பதால் தேசியவாத காங்கிரசார் அதிருப்தியில் உள்ளனர். அதேபோன்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தரப்புக்கு 8 முதல் 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என பா.ஜ.க. தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஷிண்டே தலைமையில் செயல்படுவதே சிவசேனா என இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவிடம் 13 நாடாளுமன்ற எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கையிலான தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்ற ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பா.ஜ.க. மீது அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில் பா.ஜ.க.வை குற்றம்சாட்டி சிவசேனா எம்.எல்.ஏ. ராமதாஸ் கதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பா.ஜ.க.வை நம்பி வந்த எங்களுக்கு (சிவசேனா கட்சிக்கு) துரோகம் இழைக்கப்படுகிறது. சிவசேனா கட்சியை ஒழிக்க நினைத்தால் பா.ஜ.க.வுக்கு மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.