Skip to main content

"தாடியை ஷேவ் செய்துகொள்ளுங்கள்" - பிரதமருக்கு 100 ரூபாய் அனுப்பிய டீ கடைக்காரர்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

narendra modi

 

மகாராஷ்ட்டிராவின் பாரமதி பகுதியைச் சேர்த்த டீ கடைக்காரர் அனில் மோர். இவர் இந்தியப் பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பி, அந்த பணத்தில் அவரது தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பிரதமர் மோடிக்கு பணம் அனுப்பியது தொடர்பாகப் பேசிய அனில் மோர், "பிரதமர் மோடி தாடியை வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பை வளர்க்க வேண்டும். மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். கடந்த இரண்டு ஊரடங்குகளால் ஏற்பட்ட துயரங்களிலிருந்து மக்கள் விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், "நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து ரூ .100 அனுப்புகிறேன். அவர் மிக உயர்ந்த தலைவர். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தொற்றுநோயால் ஏழைகளின் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு வழியாகும்" எனக் கூறியுள்ளார்.

 

மேலும் பேசிய அனில் மோர், "பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சமும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆயிரமும் தரவேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

  

சார்ந்த செய்திகள்