Skip to main content

'கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

supreme court

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 3.97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, மத்திய - மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருப்பதாலும், நிதி பற்றாக்குறையாலும் கரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்தது.

 

இந்தநிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம் என கூறியுள்ளது. 

 

பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன் கீழ் பரிந்துரைகளை வழங்காததன் மூலம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கடமையை செய்வதிலிருந்து தவறிவிட்டது என கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், கரோனாவால் இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளதோடு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்; உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Bail for Hemant Soren The ed sought the Supreme Court

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28 ஆம் தேதி (28.06.2024) ஜாமீனில் வெளியே வந்தார். அதனையடுத்து, சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (08.07.2024) நடந்தது. 

Bail for Hemant Soren The ed sought the Supreme Court

81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 27 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 17 எம்.எல்.ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 எம்.எல்.ஏக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதே போல், பா.ஜ.கவின் 25 எம்.எல்.ஏக்கள் உள்பட எதிர்க்கட்சியில் 27 எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் அளித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஹேமந்த் சோரனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சட்ட விரோதம். ஹேமந்த் சோரனுக்கு எதிராக முதன்மை ஆதாரமில்லை என உயர் நீதிமன்றக் கருத்து தவறானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
 The Supreme Court questions on NEET question paper leak issue

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (08-07-24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டதாவது, ‘மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாள் முன்பாக ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாதபடி நீட் தேர்வுல் இந்த முறை அதிகம் பேர் முழு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். நீட் வினாத்தாள் செல்போனில் கசிந்துள்ளன; பிரிண்டர்களில் அவை எடுத்து தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 The Supreme Court questions on NEET question paper leak issue

இதனையடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் எத்தனை பேர் தவறான வினாத்தாள் தரப்பட்ட மையங்களில் தேர்வெழுதினர்?’ எனத் தேசிய தேர்வு முகமைக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘1,563 மாணவர்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களில் 6 பேர் தான் கருணை மதிப்பெண் பெற்றனர். ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ’ எனப் பதிலளித்தனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா என நீதிபதி கேட்ட கேள்விக்கு தேசிய தேர்வு மையம் இவ்வாறு பதிலளித்துள்ளது. 

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது, “நீட் வினாத்தாள் கசிந்தது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது. வினாத்தாள் காட்டுத்தீ போல் பரவி இருக்கும். 20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100%  மதிப்பெண்கள் பெற்ற விவகாரமும் சந்தேகம் வருகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது? நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது? எப்போது அச்சிடப்படுகிறது? மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. இது தொடர்பான முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து இந்த வழக்கை வருகிற 11ஆம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.