
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயிலும் மாணவ, மாணவிகள் தனித்தனியே இரண்டு மினி வேன்களில் சிறுமலைக்கு களப்பயிற்சிக்காக வந்திருந்தனர். அப்போது, சிறுமலை பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு பின்னர் மதியத்திற்கு மேல் தங்களுடைய பயிற்சி முடித்து மீண்டும் பல்கலைக்கழகத்தை நோக்கி திரும்பிக் கொண்டிரு ந்தனர்.
மழைச்சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வாகனம் சென்ற பொழுது பிரேக் திடீரென பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் களப் பயிற்சிக்கு சென்று மீண்டும் தங்களுடைய கல்லூரி நோக்கி செல்லும் பொழுது வாகனம் மலைச்சாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.