உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நாளை (18/11/2019) பதவியேற்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்கிறார். தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பணியில் நீடிப்பார். இவர் முக்கிய வழக்குகளில் பணியாற்றியுள்ளார். அதேபோல் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சரத் அரவிந்த் பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அதன் பிறகு வழக்கறிஞர் பணியை 1978- ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தொடங்கினார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 2012- ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2013- ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியான பாப்டே ஆதார் கட்டாயம் போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.