இந்திய ரயில்வேயின் கேட்டரிங் துணை நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா அமைப்பு கடந்த நவம்பர் மாதம் ராஜதானி, சதாப்தி, மற்றும் துரான்டோ போன்ற பயணிகள் ரயில்களின் உணவு பட்டியலில் இருந்து பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நீக்கியாக தகவல் வெளியானது.
![south indian foods are back in irctc menu](http://image.nakkheeran.in/cdn/farfuture/0fao9Dc-SuhWu3EAcxgINEmgiVDubbnTwBIKHVkXPAc/1579864432/sites/default/files/inline-images/dzfbzdfbdf.jpg)
பிரபலமான தென்னிந்திய உணவு வகைகளான பழம்பொரி (வாழைப்பழ பஜ்ஜி), இலயடை, முட்டை கறி, பரோட்டா, தோசை, புட்டு, பஜ்ஜி, கொழுக்கட்டை, ஆப்பம், சுழியன் உள்ளிட்ட உணவு வகைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வடஇந்திய உணவு வகைகளான சமோசா, கச்சோரி போன்ற உணவுகள் சேர்க்கப்பட்டது. ஐஆர்சிடிசி-யின் இந்த முடிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ரயில் பயணிகள் மற்றும் இணையவாசிகள் என பல்வேறு தரப்பிலும் இந்த முடிவு கடும் எதிர்ப்பை பெற்றது. ட்விட்டரில் ஐஆர்சிடிசி- க்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஐஆர்சிடிசி-யை இணைத்து ஒரு ட்விட்டர் பயனாளர், "இது கலாச்சார பாசிசம்" என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஐ.ஆர்.சி.டி.சி "முன்னர் வழங்கப்பட்ட அனைத்து உணவு பொருட்களும் மீண்டும் உணவு பட்டியலில் இணைக்கப்படும்" என்று பதிலளித்தது. இந்த சூழலில் பதிலளித்த ஒரு வாரத்திற்குள் தற்போது மீண்டும் உணவு பட்டியலில் அவை சேர்க்கப்பட்டுள்ளன.