
திமுக இந்து விரோத கட்சி என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில், அவர்களுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கட்சி விழா ஒன்றில் பேசிய கனிமொழி, “இந்துக்களுக்கு திமுக விரோதி என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் முதல் முறையாக கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த தேரை ஓட வைத்ததே கலைஞர் தான். தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை மட்டுமே நம்பிய கலைஞர்தான் இந்து மக்களுக்காக அந்த திருவாரூர் தேரை ஓடவைத்தார்.
பெண்களை படிக்க வையுங்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க நான் உதவி செய்கிறேன் என்று கலைஞர் கூறினார். அந்த திட்டம் எந்த பாகுபாடும் காட்டாமல் நிறைவேற்றப்பட்டது. அதில் அதிகம் பயனடைந்தது இந்து பெண்கள் தான். அந்த பெண்கள் இன்றைக்கு படித்துவிட்டு மருத்துவராகவும், கவுன்சிலராகவும், ஆசிரியராகவும் இருக்கிறார்கள். இன்னும் பல துறைகளில் சாதனை படைத்தும் வருகிறார்கள். இதற்கு காரணம் கலைஞர் தான். ஒரு மதம் யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று வைத்திருந்ததோ, அவர்களுக்கு படிப்பைக் கொடுத்தவர் கலைஞர். எந்த இந்துக்களை எல்லாம், அடக்கி ஒடுக்கி, ஓரங்கட்டி வைத்திருந்தார்களோ, அவர்களுக்கு இன்று தன்னம்பிக்கையை, சுயமரியாதையை சமூகத்தில் உருவாக்கி கொடுத்தது திமுக தான்.
ஆகையால், உண்மையிலேயே, பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்களுக்கு நல்லது செய்திருப்பது, அவர்களுக்காக உழைத்திருப்பது திமுக மட்டும் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேல் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக செல்வோரின் பசப்பு வார்த்தைகளை தமிழ்நாட்டு மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.