Skip to main content

போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிய பள்ளி வாகனம்; பயத்தில் கதறி அழுத குழந்தை!

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

A school bus stuck in Bihar Darbhanga

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

 

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பீகார் மாநிலம் லக்கிசராய் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைத்தனர். உடனடியாக பயணிகள் வெளியேறியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. 

 

உத்தரப்பிரதேசம் மாநிலம், பலியா ரயில் நிலையத்தில் கடைகள் மற்றும் அலுவலகத்தைச் சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் ரயில் நிலையமே வன்முறை களமாகக் காட்சியளித்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் தீயைக் கட்டுப்படுத்தினர். 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்வதால், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த மாநிலங்களில் சில இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில், பீகார் மாநிலம் தர்பங்கா பகுதில் இன்று அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்போது இன்று பிற்பகல் பள்ளி முடித்து மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பள்ளி வாகனம் தர்பங்காவில் போராட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டது. அந்த வாகனத்தில் இருந்த ஒரு சிறுவன் போராட்டக்காரர்களின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்து அழுதுள்ளான். பின்னர் காவல்துறையின் உதவியுடன் அந்தப் பள்ளி வாகனம் மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. 

 

நேற்று பீகார் மாநிலம், சாத்ரா என்ற இடத்தில் ரயில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில், இன்றும் பல இடங்களில் வன்முறை நீடிக்கிறது. இதனிடையே, தெலங்கானா மாநிலம், செகந்தராபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்