Skip to main content

ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை நிறைவேற்றிய மஹாராஷ்ட்ரா!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

uddhav thackeray

 

இந்திய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களுக்கு, அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பார்கள். மேலும் ஆளுநர்களே துணை வேந்தர்களை நியமிப்பார்கள். அதேசமயம் துணை வேந்தரை நியமிப்பதற்கான நடைமுறை மாநிலங்களுக்கு மாநிலம் சிறிய அளவில் மாறுபடுகிறது.

 

மஹாராஷ்ட்ராவை பொறுத்தவரை, துணை வேந்தர் பதவிக்காக துணை வேந்தர் தேடல் குழு ஐந்து நபர்களை அம்மாநில ஆளுநக்கு பரிந்துரைக்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிப்பார். மேலும் அரசு அமைக்கும் தேடல் குழுவில் ஒரு நபரை ஆளுநர் நியமிக்கலாம். இந்தநிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்து ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் விதமாக மஹாராஷ்ட்ரா அரசு புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

 

மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்கள் சட்டம், 2016-ஐ திருத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவின்படி, இனி துணை வேந்தர் தேடல் குழு, ஐந்து பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து இரண்டு பெயர்களை மஹாராஷ்ட்ரா அரசு ஆளுநருக்கு அனுப்பும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் 30 நாட்களுக்குள் துணை வேந்தராக நியமிக்க வேண்டும்.

 

மேலும் இந்த புதிய மசோதா, மஹாராஷ்ட்ர பல்கலைக்கழங்களில் இணைவேந்தர் என்ற பதவியை உருவாக்க வழிவகை செய்கிறது. அந்த இணைவேந்தர் பதவியை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் வகிப்பார் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதோடு, ஆளுநர் இல்லாதபோது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இணைவேந்தர் தலைமை தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத்தவிர பல்கலைக்கழங்களின் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் இணைவேந்தர் கேட்கலாம் என்றும், இணைவேந்தர் கேட்கும் தகவல்களை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.