Skip to main content

"ஆட்டம் தொடரும்" -மம்தா பானர்ஜி சூளுரை!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

MAMATA BANERJEE

 

மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது நடத்திய போராட்டம் ஒன்றில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து மம்தா திரிணாமூல் கட்சியைத் தொடங்கினார். இருப்பினும் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நாளான ஜூலை 21 ஆம் தேதியை திரிணாமூல் காங்கிரஸ், தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது.

 

அந்தவகையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தியாகிகள் தினத்தைக் கொண்டாடியது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இன்று தேசிய அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த தியாகிகள் தினத்தில் மம்தாவின் உரை முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. தேசிய அரசியலில் நுழைவதால் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், திரிபுரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் மம்தா பேசுவது நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் தியாகிகள் தின உரையாற்றிய மம்தா, பாஜகவை மத்தியிலிருந்து அகற்றும் வரை அனைத்து மாநிலங்களிலும் 'கேலா ஹோப்' நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 'கேலா ஹோப்' என்பது நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பயன்படுத்திய வாசகமாகும். இதற்கு ஆட்டம் தொடரும் என்பது பொருள்.

 

இதுதொடர்பாக பேசிய மம்தா, "பாஜக இந்தியாவை இருளுக்குள் அழைத்துச் சென்று விட்டது. அதனை மத்தியில் இருந்து நீக்கும்வரை 'கேலா ஹோப்' தொடரும். பாஜகவை நாட்டிலிருந்து அகற்றும்வரை அனைத்து மாநிலங்களிலும் கேலா (ஆட்டம்) நடைபெறும். எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை நான் அறிவேன். எங்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் (எங்கள்) அனைவருக்கும் தெரியும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாருடனோ, பிற எதிர்க்கட்சித் தலைவர்களுடனோ அல்லது முதலமைச்சர்களுடனோ என்னால் பேச முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்டு உளவு பார்க்கப்படுகிறோம். ஆனால் எங்களைக் கண்காணிப்பது 2024 மக்களவைத் தேர்தலில் அவர்களைக் காப்பாற்றாது" எனக் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழுவை  நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாட்டைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். அனைத்து தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுகிறது. உங்களால் தானாக முன்வந்து விசாரிக்க இயலாதா? இதுபற்றி விசாரிக்கக் குழுவை அமையுங்கள். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்" எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.