
தன்னுடைய 17 வயது மகளை காணவில்லை என தந்தை ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 17 வயது சிறுமியும் 19 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து காஜியாபாத் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டு அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார், 19 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. பெண்ணின் சம்மதத்துடன் தான் அனைத்து செயல்களும் செயல்பட்டதாகவும், அது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் கூறி, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்த இளைஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜஸ்மீத்சிங் முன்பு வந்தது. அப்போது அவர் கூறியதாவது, “சம்பவம் நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட இளைஞருக்கு 19 வயதும், சிறுமிக்கு சுமார் 17 வயதும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது இளம் பருவத்தினரின் காதல் வழக்கு. மேலும், அவர்களுக்கு இடையேயான சம்மத அடிப்படையில் உடல் உறவுகள் நடந்துள்ளது. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை குற்றவாளியாக்குவது நீதியின் வக்கிரம், நீதியை மீறுவதாகும். அந்தப் பெண்ணின் கருத்தும் விருப்பமும் உறுதியாக இருந்தபோது, அவர் 18 வயதுக்குக் குறைவானவர் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய பார்வையை ஒதுக்கித் தள்ளுவது முறையற்றது.
சிறுமியின் வயதை அரசு தரப்பில் உறுதியாக நிரூபிக்க தவறிவிட்டது. எனவே சந்தேகத்தின் பலனை இளைஞருக்கு வழங்கி அவரை சிறையில் இடுத்து விடுவிக்க உத்தரவிடுகிறேன்” என்று கூறி அவரை விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் போது நீதிபதி மேலும் கூறுகையில், “ஒருமித்த மற்றும் வற்புறுத்தலற்ற அத்தகைய உறவுகளை அங்கீகரிக்க சட்டம் உருவாக வேண்டும். ஒருமித்த மற்றும் மரியாதைக்குரிய இளம் பருவ காதல் மனித வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும். இளம் பருவத்தினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், அச்சமின்றி உறவுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட வேண்டும். இளம் பருவ காதல் குறித்த சமூக பார்வைகள் மாற வேண்டும். அதில் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் இல்லாத காதல் உறவுகளில் ஈடுபடும் இளைஞர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
காதல் என்பது ஒரு அடிப்படை மனித அனுபவம். இளம் பருவத்தினர் உணர்ச்சி ரீதியான தொடர்புகளை உருவாக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். இந்த உறவுகள் ஒருமித்த கருத்துடன் மற்றும் வற்புறுத்தலிலிருந்து விடுபட்டிருந்தால், சட்டம் இந்த உறவுகளை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும். காதலைத் தண்டிப்பதை விட பாலியல்சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் கவனம் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.