
சாலை விபத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் மைனே என்ற இளைஞர். இவர் கடந்த 12ஆம் தேதி தனது பெற்றோருடன் காரில் சென்றுள்ளார். டிண்டோஷி பகுதியில் ஆகாஷ் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதனால், ஆட்டோ டிரைவர், ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறி, ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த ஆகாஷ் கீழே விழுந்துள்ளார்.
இருந்த போதிலும், ஆகாஷை அவர்கள் தொடர்ந்து அடிக்க தொடங்கியுள்ளனர். இதனை கண்ட ஆகாஷின் பெற்றோர், அவர்களிடம் கெஞ்சினாலும், அவர்கள் தொடர்ந்து ஆகாஷை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டு இளைஞரை கொன்ற 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகாஷை, ஆட்டோ டிரைவரும் அவரது நண்பர்களும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.