Skip to main content

சிறுமியின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Governor Tamilisai Tributes to the Girl child  Public struggle

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சிறுமி ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் நேற்று (05.03.2024) கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் என ஏராளமானோர் முத்தியால்பேட்டை அருகே உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது, “கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரைப் பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டைக் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்துள்ளது.

அதேநேரம் இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் எனச் சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், 'கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை, கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது' என பேசும் அந்த ஆடியோ பரவி வருகிறது. அந்த ஆடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த செய்திகள் பரவின. மேலும் சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது சிலர் ஏறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. முன்னதாக சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை அடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Governor Tamilisai Tributes to the Girl child  Public struggle

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு சோலை நகரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வந்தார். அப்போது ஆளுநர் தமிழிசைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, “வெளியேறு, வெளியேறு” என முழக்கமிட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் அஞ்சலி செலுத்தக்கூடாது என ஆளுநர் தமிழிசையை சிலர் தடுக்க முயன்றனர். பொதுமக்களின் இந்த கடும் எதிர்ப்புக்கு இடையே சிறுமியின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்