
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு வாழ்க்கையையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உடனடியாக உணவு உடை உள்ளிட்ட நிவாரணம் வழங்க வேண்டிய அரசாங்கம் 30 நாட்களுக்கு பிறகு அரிசி பருப்பும் பாயும் போர்வையும் வழங்கி வருகிறது. அதிலும் 27 பொருட்கள் என்று சொல்லி கட்ட முடியாத சேலைகளை அட்டைப் பெட்டியில் அடைத்து கொடுத்துள்ள சம்பவமே மறையாத நிலையில் அவர்கள் கொடுத்த நிவாரண பால் பவுடர் டிசம்பர் 6 ந் தேதியுடன் காலாவதி ஆவதாக வழக்கம் போல ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தாலும் அதற்கு உள்ளே பழைய தேதியை மறைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி அருகில் உள்ள மஞ்சுவிடுதி கிராமத்தில் இன்று வழங்கிய நிவாரணப் பொருட்களில் இருந்த காலாவதியான பால் பவுடரை சிறுவர்களும் பெரியவர்களும் குடித்து வாந்தி மயக்கம் பேதி என்று 10 க்கும் மேற்பட்டோரை கறம்பக்குடி தாலுகா மரு்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கே யாரும் இல்லை ஆத்திரமடைந்த மக்கள் மருத்துவமனைக்கு பூட்டு போட்டதுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நிவாரணம் என்றால் எதை வேண்டுமானாலும் கொடுக்க துணிந்துவிட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள் என்கிறார் சிபிஎம் மா.செ கவிவர்மன். மேலும் இதை கண்டித்து போராட்டங்களும் நடத்துவோம் என்றார்.