Skip to main content

"இதுவொரு நெருக்கடி..அவசரக் கூட்டத்தைக் கூட்டுங்கள்" - மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

supreme court

 

டெல்லியில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் உள்ளது.


இந்த நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காற்று மாசை கட்டுப்படுத்த இரண்டுநாள் ஊரடங்கை அமல்படுத்த முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த டெல்லி அரசு, டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்தத் தயார் என்றும், ஆனால் அண்டை மாநிலங்களில் உள்ள தேசிய தலைநகர் பகுதிக்கும் ஊரடங்கு விதித்தால்தான் ஊரடங்கு விதிப்பதற்கு அர்த்தம் கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

 

இதற்கிடையே மத்திய அரசு, பயிர்க்கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமல்ல என்றும், பயிர்க்கழிவுகளை எரிப்பது வெறும் 10 சதவீத மாசுபாட்டையே ஏற்படுத்தும் எனத் தெரிவித்தது.

 

இதன்பின்னர் உச்சநீதிமன்றம், காற்று மாசுபாடு ஒரு நெருக்கடி எனத் தெரிவித்ததோடு, டெல்லி அரசு நொண்டி சாக்குகள் கூறுவதாக விமர்சித்தது. தொடர்ந்து நீண்டகால நடவடிக்கைகளைவிட அவசரக்கால நடவடிக்கைகளே இப்போது முக்கியம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

தொடர்ந்து உச்சநீதிமன்றம், தற்போதைக்கு எந்தெந்த தொழிற்சாலைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம், எந்தெந்த வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம், எந்தெந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தலாம் என்பது குறித்து நாளை மாலைக்குள் தெரிவிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தினால் மின்சாரம் வழங்குவது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

 

மேலும் உச்சநீதிமன்றம், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு, கட்டுமான பணிகளை நிறுத்துதல், அத்தியாவசியமற்ற போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் இயக்கத்தை நிறுத்துதல், பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்குதல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் பஞ்சாப், ஹரியானா உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.