Skip to main content

'18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி' - மத்திய அரசு அறிவிப்பு!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

coronavirus vaccine union government announcement


இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று (19/04/2021) சிறந்த மருத்துவர்கள், முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 

 

coronavirus vaccine union government announcement

 

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பில், "நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசிப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக மே 1- ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், வயது வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளது. 

 

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்