Skip to main content

புதுச்சேரி சிறுமி கொலையில் துப்பு துலங்கியது; இளைஞர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Clues in Puducherry girl's case; Shocking confession given by the youth

புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

சிறுமியின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்து வந்த பொழுது சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். ஏற்கெனவே தமிழகத்தில் குழந்தைகள் கடத்த ஒரு கும்பல் வந்துள்ளதாக தகவல் பரவும் நேரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையின் பின்னணியில் உள்ள கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சிறுமியை அழைத்துச் சென்றது யார்? எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், 'கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை,கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது' என பேசும் அந்த ஆடியோ பரவி வருகிறது. அந்த ஆடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்பொழுது வரை கடத்தல் வழக்காக இருந்த இந்த சம்பவம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்