
எருமை மாடை வரதட்சணையாக கேட்டு பெண்ணை கொடுமை செய்த குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணங்களில் வரதட்சணையை ஒழிக்க பல்வேறு தரப்பினரும் போராடியும், விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், இன்னும் வரதட்சணை முறை தொடர்ந்து கொண்டு வருகிறது. வரதட்சணை பிரச்சனையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதும், திருமணங்கள் நிற்பதும், திருமண முறிவுகளும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதேபோல், தற்போது, மும்பையில் எருமை மாடு வரதட்சணையாக கேட்டு தருவதற்கு தாமதமானதால் விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை, பாடன் நகரில் திருமணமான 4 ஆண்டுகள் ஆகியும் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்காததால் கணவர் தனது மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தனர்.
மும்பை, பாடன் நகரில் உள்ள ரம்ஜான்பூரில் வசிப்பவர் சமீருதீன். இவர், கடந்த 2017ம் ஆண்டு புல்பனோ என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே சமீருதீன் குடும்பத்தினர், புல்பனோவை குறைவாக வரதட்சணை கொண்டு வந்ததாக கூறி துன்புறுத்தியுள்ளனர். மேலும், சமீருதீன் குடும்பத்தார், புல்பனோவை 1 லட்சம் ரூபாயும், ஒரு எருமை மாட்டையும் கொண்டு வரச்சொல்லியும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், புல்பனோ நீதிமன்றத்தை நாடினார். அதன்பின் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சமீருதீன் குடும்பத்தாரை கைது செய்தனர்.