Skip to main content

அசாமில் உடைகிறது காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் கூட்டணி!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

congress

 

அசாம் மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் 7-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து 'மகாஜோத்' (பெரும்  கூட்டணி) என்ற பெயரில் மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தது. இருப்பினும் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது. பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

 

இந்தநிலையில் காங்கிரஸ் தலைமையிலான 'மகாஜோத்' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை (ஏ.ஐ.யூ.டி.எப்) மகாஜோத் கூட்டணியில் இருந்து விலக்க அசாம் மாநில காங்கிரஸ் முடிவெடித்துள்ளது.

 

அண்மைக்காலமாக ஏ.ஐ.யூ.டி.எப் கட்சி தலைமையும், மூத்த தலைவர்களும் பாஜகவையும், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவையும் புகழ்ந்து வருவது காங்கிரஸ் மீதான பொதுமக்களின் பார்வையை பாதிப்பதால், ஏ.ஐ.யூ.டி.எப் கட்சியை கூட்டணியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக அசாம் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.

 

அதேபோல் போடோலாந்து மக்கள் முன்னணி 'மகாஜோத்' கூட்டணியில் இருக்க விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளதால், அந்த கட்சியையும் கூட்டணியில் இருந்து முடிவெடுத்துள்ளதாக அசாம் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏ.ஐ.யூ.டி.எப்பையும்,  போடோலாந்து மக்கள் முன்னணியையும் கூட்டணியில் இருந்து விலக்கும் முடிவை அசாம் காங்கிரஸ், காங்கிரஸின் மத்திய தலைமைக்கு தெரிவிக்கவுள்ளது. காங்கிரஸின் மத்திய தலைமை, அசாம் காங்கிரஸின் முடிவுக்கு ஒப்புதல் அளித்தால் ஏ.ஐ.யூ.டி.எப்பையும், போடோலாந்து மக்கள் முன்னணியும் அதிகாரப்பூர்வமாக 'மகாஜோத்' கூட்டணியில் இருந்து நீக்கப்படும்.

 

இதற்கிடையே 'மகாஜோத்' கூட்டணியில் இருந்து தங்களை நீக்க அசாம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது துரதிருஷ்டவசமானது என ஏ.ஐ.யூ.டி.எப் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.