
பண்டிகை காலம் நெருங்குவதால் கரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே திருவிழா கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'திருவிழா கூட்டங்கள் காரணத்தால் மீண்டும் இந்தியாவில் கரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் கரோனா பரிசோதனை எண்ணிக்கையையும், கரோனா தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் நேற்று ஒருநாளில் கரோனா பாதிப்பு என்பது 1,694 லிருந்து குறைந்து 1,657 ஆகப் பதிவாகியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,51,880 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் நேற்று 186 பேருக்கு கரோனா உறுதியானது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஒரேநாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,509 ஆக உள்ளது.