திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞரின் உற்ற தோழர் ஆகவும், 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகநலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய பொதுச்செயலாளர் பேராசிரியர் சில நாட்கள் உடல் நலிவுற்று இருந்த நிலையில் 7-3-2020 அதிகாலை ஒரு மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார். கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் மாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரின் வீடு அமைந்திருக்கக் கூடிய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு எடுத்து செல்லப்படயிருக்கிறது.