Skip to main content

என்ஆர்சி குறித்து பிரதமர் மோடி சொன்னதெல்லாம் பொய்கள்தானா?

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

புதிய குடியுரிமைச் சட்டத்தை இயற்றிவிட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, மக்கள் எதிர்ப்பை கண்டதும் தனது உள்துறை அமைச்சர் சொன்னதையே பிரதமர் மோடி மறுத்துப் பேசும் நிலை உருவானது. ஆனால், அதுவும் பொய் என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
 

என்ஆர்சி தொடர்பாக பிரதமர் மோடி சொன்னவற்றை இங்கே பார்க்கலாம்.

1. 2014ல் நான் முதல்முறையாக பிரதமர் ஆனவுடன் என்ஆர்சி குறித்து ஒருபோதும் விவாதிக்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கொடுத்தேன் என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் மோடி பேசினார். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்துவோம் என்று கூறப்பட்டிருந்தது. அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் இதை வலியுறுத்தினார். முதலில் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவோம். பிறகு நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தி, அன்னியர்களைக் கண்டுபிடித்து இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்று அவர் பேசியிருக்கிறார்.
 

2. குடியுரிமை இல்லாதவர்கள் என்று அறியப்படுவோருக்கு முகாம்கள் கட்டுவதாக பாஜக மீது காங்கிரஸும், அறிவுஜீவிகளும் குற்றச்சாட்டு கூறுவது பொய் என்று மோடி சொன்னார். ஆனால், அசாம், மும்பை, பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் இத்தகைய முகாம்கள் கட்டப்படுவதை புகைப்பட ஆதாரங்களுடன் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

NRC PM NARENDRA MODI AND UNION HOME MINISTER AMITSHAH


3. எரிக்க விரும்பினால் எனது உருவபொம்மையைக் கூட எரியுங்கள். ஏழைகளை துன்புறுத்தாதீர்கள். போலீஸார் மீது கல்லெறிந்து அவர்களை காயப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசினார். இதுவும் உண்மையில்லை. ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை மட்டுமல்ல, நெருக்கடியில் சிக்கிக்கொண்ட பொதுமக்களையும் போலீஸார் தாக்கியதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
 

4. குடியுரிமை சட்டமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ இந்திய முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மோடி கூறியதும் உண்மையல்ல. 2019 ஏப்ரல் மாதம் அமித்ஷா பேசும்போது, முதலில் குடியுரிமைச் சட்டத்தை கொண்டுவருவோம். இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை கொடுப்போம். பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவியர்களை எளிதில் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்றார். அதாவது இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க எந்த ஆவணமும் தேவையில்லை. அப்படியானால், என்ஆர்சி கணக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு மட்டுமே கடும் நெருக்கடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கில் காட்டவேண்டிய ஆவணங்களைக்கூட மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை.

NRC PM NARENDRA MODI AND UNION HOME MINISTER AMITSHAH


5. அர்பன் நக்சல்களும், காங்கிரஸ் கட்சியும் வதந்திகளை பரப்புகின்றன என்றும் மோடி கூறினார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அர்பன் நக்ஸல்கள் என்று மோடி குறிப்பிடும் அறிவுஜீவிகளும், காங்கிரஸ் கட்சியும் வதந்திகளைப் பரப்புவதால்தான் போராட்டங்கள் தொடர்வதாக மோடி கூறுவதே ஜோக் என்கிறார்கள். போராட்டங்கள் தொடங்கும்போது ராகுல்காந்தி தென்கொரியாவுக்கு சென்றுவிட்டார். எனவே அவர் தூண்டிவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தென்கொரியாவிலிருந்து திரும்பியதும்தான் காங்கிரஸ் கட்சி காந்தி சமாதியில் ஒரு போராட்டத்தை அறிவித்தது. அதில் வெளிப்படையாகவே மாணவர்களையும் இளைஞர்களையும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். நாடு முழுவதும் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான போராட்டங்களை பார்க்கிறவர்கள் யாரும் அதை யாரோ தூண்டிவிட்டு நடந்ததாக நினைக்க மாட்டார்கள்.


பாஜக அமைச்சரே பல்டி!

அசாம் மாநில பாஜக அரசில் நிதியமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பேட்டி மோடிக்கு சரியான பதிலாக இருக்கும். மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கும் குடியுரிமை வழங்குவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.


மோடிக்கு அமித்ஷா சப்பைக்கட்டு!

மக்கள் போராட்டக் களத்தில் இறங்கிய பிறகும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று கூறிய அமித்ஷாவும், என்ஆர்சி குறித்து மோடி சொன்ன பொய்யை உண்மையாக்க, அவர் பேசியதை அவரே மறுக்கிற நிலைக்கு சென்றிருக்கிறார்.

NRC PM NARENDRA MODI AND UNION HOME MINISTER AMITSHAH



தேசிய குடிமக்கள் பதிவேடு என்ப்படும் என்ஆர்சிக்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்பிஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் விவரங்கள் என்ஆர்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி சொல்வது சரிதான் என்றும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.


சிதம்பரம் கிண்டல்

"பாஜக செயல் தலைவராக இருக்கிற நட்டா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என்கிறார். அமித்ஷா நாடாளுமன்றத்திலேயே என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்கிறார். ஆனால், மக்கள் போராட்டம் தீவிரமானதும் எல்லாவற்றையும் மறைக்கப் பார்க்கிறார்.

NRC PM NARENDRA MODI AND UNION HOME MINISTER AMITSHAH


என்ஆர்சியால் மக்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. அவர்களுக்காக அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டும். அசாமில் 19 லட்சம் பேரை குடியுரிமை அற்றவர்களாக அறிவித்துள்ளனர். அவர்களுக்காக முகாம்கள் கட்டப்படுவதாக சொல்லப்படுவதை மோடி மறுக்கிறார். ஆனால், படங்களுடன் செய்தி வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்குவதற்கு 40 கோடி செலவில் முகாம் கட்டப்படுகிறது. அப்படியானால், 19 லட்சம் பேரை தங்கவைக்க 24 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இதெல்லாம் இப்போது தேவையா? இந்தியாவை இன்னொரு ஜெர்மனியாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்" என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.
 

 

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.