Skip to main content

ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படுகிறதா ?  முப்படைகளுக்கும் ஒரே தளபதி சர்ச்சை ! 

Published on 16/08/2019 | Edited on 16/08/2019


சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் புதிய அறிவிப்பு குடியரசு தலைவரின் அதிகாரத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கையா? என்கிற கேள்வி காங்கிரஸ் தலைவர்களிடம் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. 

 

858585


இந்தியாவின் 73-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை ( ஆகஸ்ட்-15 ) கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ’’  ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்குமிடையே  ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், அவைகளுக்கு ஆற்றல் மிகுந்த தலைமையை வழங்கவும் முப்படைத் தளபதி என்கிற பதவியை உருவாக்க அரசு முடிவு செய்திருக்கிறது. முப்படைகளும் ஒன்றாகப் பயணிக்க இது உதவும். மாறி வரும் உலகத்தன்மைக்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டியதிருக்கிறது ‘’ என்றார். 
        பிரதமரின் இந்த புதிய அறிவிப்பு, முப்படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த சூழலில், முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட , அவைகளுக்கு கட்டளையிட முப்படைகளுக்கும் ஒரே தளபது என்கிற பதவி ஆரோக்கியமானதுதான். ஆனால், இந்த புதிய அறிவிப்பு குடியரசு தலைவரின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கிறது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. 




இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி முப்படைகளின் தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கிறார். பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துபவராகவே குடியரசு தலைவர் பதவி இருந்தாலும் கூட , அவருக்கான அதிகாரத்தை புறந்தள்ளிவிட முடியாது. முப்படைகளுக்குமான தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கும் நிலையில், அவர் மூலமாகவே முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட கட்டளைகள் பிறப்பிக்க முடியும். இந்த சூழலில், முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்கிற பதவி உருவாக்கம் தேவையற்றது. அதனை உருவாக்குவதன் மூலம் குடியரசு தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்கிறார்கள் 

 

இதுகுறித்து முன்னாள் ராணுவத்தினர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’ முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்பது சிறப்பானதுதான். ஆனால், அதில் சில குழப்பம் இருக்கிறது. அதாவது, தற்போது மூன்று படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதிகள் இருக்கின்றனர். இந்த மூன்று தலைமை தளபதிகளின் பதவியை நீக்கி விட்டு, முப்படைகளுக்கும் ஒரே தளபதிதான் என்கிற நிலையை உருவாக்கப்போகிறார்களா ? அல்லது மூன்று தலைமை தளபதிகளின் பதவிகள் நீக்கப்படாமல் அந்த 3 தளபதிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு கட்டளையிட ஒரு தலைமை தளபதியை உருவாக்கப் போகிறார்களா? என தெரியவில்லை ‘’ என்கிறார்கள். 

 

 

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரிட்டன் முழுவதும் விமான சேவை முடங்கியது!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Flight services across Britain are suspended

 

பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.

 

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.