Skip to main content

நித்தி பதுங்கிய நாடு! கண்டுபிடித்த பக்தர்கள்!

Published on 02/02/2019 | Edited on 04/03/2019

யார் எந்தக் கேள்வி கேட்டாலும் படார் என பதில் சொல்லும் பாணிமூலம் பிரபலமடைந்தவர்தான் ரஞ்சிதாவுடனான வீடியோ புகழ் நித்தியானந்தா சுவாமிகள். உலகமெங்கும் இருக்கும் அவரது பக்தர்கள் கேட்கும் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அந்தக் கேள்வி மிகக்கடினமான கேள்வியல்ல.

""சுவாமி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களை நேரில் தரிசிக்க முடியுமா?'' -என்பதுதான் அந்தக் கேள்வி.

nithy


""நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. பரபிரம்மமான நான் தூணிலும் துரும்பிலும், காற்றிலும் மழையிலும், கொட்டுகின்ற பனியிலும் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறேன். என்னால் உங்களை உணர முடியும். நீங்கள் என்னை உணரலாம். நீங்கள் என் உடல் எங்கிருக்கிறது என கேட்கிறீர்கள். நான் உங்கள் உயிரின் ஒலியை உணர்ந்துகொண்டிருக்கிறேன். என் உடலை தேடாதீர்கள். அது நிரந்தரமற்றது'' என வளைத்து வளைத்து ஆன்லைன் வீடியோக்களில் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

திருவண்ணாமலை ஆசிரமம், பெங்களூரு பிடதி ஆசிரமம், மதுரை ஆதீனம், கும்பமேளா என அனைத்து இடங்களிலும் திருவிழாக் களிலும் பெண் பக்தர்கள் புடைசூழ காட்சியளிப்பதை வழக்கமாகக் கொண்ட நித்தியானந்தாவை கடந்த மூன்று மாதமாகக் காணவில்லை. தினமும் பக்தர்களுக்காக இணையதளங்களில் மட்டும் தோன்றி ஆசிர்வதித்து வருகிறார். அவர் எங்கே இருக்கிறார் என கேள்வி கேட்கும் பக்தர்களுக்கு "நித்தியானந்தா இமயமலையில் தவம் புரிந்துவருகிறார்' என பதில் சொல்கிறார்கள் ஆசிரமவாசிகள். இமயமலையில் உலகிலேயே அதிக குளிர் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் இமயமலையில் தவம் புரிந்தால் நித்தியானந்தா இறந்து விடுவார் என அறிவாளித்தனமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்வதில்லை ஆசிரம வாசிகள்.

தோண்டித் துருவி கேள்வி கேட்கும் பக்தர்களுக்கு, "நித்தியானந்தா இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் கட்டாயம் இந்தியாவில்தான் இருந்தாக வேண்டும். அவர் வெளிநாடு போகவேண்டும் என்றால் கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் இருக்கணும். அவரது பாஸ்போர்ட் கடந்த அக்டோபர் மாதமே காலாவதியாகி விட்டது. அதை அவர் புதுப்பிக்கவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நித்தி, வெளிநாட்டுக் குச் செல்ல முடியுமா?' என எதிர் கேள்வி கேட்கிறார்கள் நித்தியானந்தா தியான பீடத்தின் நிர்வாகிகள்.

நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் இணைந்த வீடியோ வெளியானபோது நித்தியையும் ரஞ்சிதாவையும் இணைத்து வைத்தவர். அவருக்கு எல்லாம் தெரியும். அவரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என ஒருவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் பெயர்... மா நித்தியானந்த கோபிகா. அவர் தலைமறைவானார். அவரைப்பற்றி இதுவரை எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. கோபிகா எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என நித்தியானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இப்பொழுது நித்தியானந்தா வையே காணோம். அவர் கோபிகாவோடு இணைந்துவிட்டாரா? என பக்தர்கள் கேள்வி கேட்டால், "தெரியாது' என்கிற பதிலே ஆசிரம வட்டாரத்திலிருந்து வருகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

நித்தியானந்தாவிற்கு எதிராக மைசூர்-ராம்நகர் கோர்ட்டில் ஒரு பாலியல் வழக்கு நடந்துவருகிறது. அந்த வழக்கில் நித்தி ஆஜராகவில்லை. அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, நித்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கிறார். அதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் நித்தி. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நித்திக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்கிறது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார். ஆனால் "பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து நித்தி அவருக் கெதிரான வழக்கு நடக்கும் ராம்நகர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடிவாரண்டை ரத்துசெய்யும் வழக்கை நடத்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த நித்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். உண்மையில் நித்தி எங்குதான் இருக்கிறார் என நாம் விசாரணையைத் தொடங்கினோம்.

nithyநவம்பர் மாதம் வடமாநில சுற்றுப்பயணம் செய்வதாக பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட நித்தி அதிலிருந்து காணவில்லை. அவரைக் கடைசியாக உத்திரப் பிரதேசத்தில் பார்த்ததாக அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். உத்திரப்பிரதேசத்திற்குப் பக்கத்திலிருக்கும் நாடுதான் நேபாளம். அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை யில்லை. வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு நேபாளத்திற்குச் செல்லலாம். நேபாள தலைநகர் காட்மண்டுவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பறக்கலாம்.

உத்திரப்பிரதேசம் வழியாக காட்மண்டு சென்ற நித்தி யானந்தா அங்கிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோ வுக்குச் சென்றார். அங்கிருந்து பிரேசிலின் பக்கத்தில் உள்ள குட்டிநாடான சுரிநாமுக்கு சென் றிருக்கிறார். தென்அமெரிக்க நாடுகளிலேயே இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடு சுரிநாம். அந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்கள்தொகையில் பாதிபேர் இந்தியர்கள். இந்தியர் ஒருவர்தான் அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக உள்ளார். அந்த நாட்டில்தான் ஏற்கனவே நித்தியானந்தா ஆசிரமத்தி லிருந்து காணாமல் போன மா நித்தியானந்தா கோபிகா இருக்கிறார் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

"இதை எப்படி உறுதிப் படுத்தினீர்கள்' என கேட்டோம். ""தற்பொழுது தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. தினமும் ஃபேஸ்புக்கிலும் யு-டியூப் போன்ற இணையதளங்களில் வரும் நித்தியானந்தாவின் லைவ் நிகழ்ச்சிகள் எங்கிருந்து இணையதளத்தில் ஏற்றப்படுகிறது என கண்டுபிடிக்கும் கணினி வல்லுநர்கள் இந்தியாவில் நித்தியின் பக்தர்களாகவே இருக்கிறார்கள்'' என்கிறார்கள் ஆசிரமவாசிகள்.

"ஏன் நித்தி பயந்து ஓடவேண்டும்' என கேட்டதற்கு, ""வடநாட்டில் உள்ள சாமியார்களான ஆசாராம் பாபு, ராம்ரஹீம் போன்றவர்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனை தனக்கும் கிடைக்கும் என நம்புகிறார் நித்தி. அவர்களைப் போலவே "நான் கடவுள்' எனச் சொல்லி ஆன்மிக பாலியல் உறவு வைத்திருக்கிறார் நித்தி. அவர்களாவது பெண்களைக் கற்பழித்தார்கள்... நித்தி ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்ததாக வழக்கு நடக்கிறது. "அந்த வழக்கை தினமும் நடத்தவேண்டும், விரைவில் தீர்ப்பு தரவேண்டும்' என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேர்மைக்குப் புகழ்பெற்ற நீதிபதி விசாரிக்கும் பாலியல் வழக்கில் தண்டனை நிச்சயம் என்பதால் தீர்ப்பு வருவதற்கு முன்பே தலைமறைவாகி ஆன்லைன் சாமியாராகிவிட்டார் நித்தி'' என்கிறார்கள் அவரது பக்தகோடிகள்.


 

Next Story

கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா; நித்தியிடம் இருந்து கைமாறும் பவர்!

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Ranjitha Prime Minister of Kailash

 

சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா, ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.

 

காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓட வேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்புகளையும் உயரங்களையும் பற்றி குற்றம் சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.

 

Ranjitha Prime Minister of Kailash

 

லிங்க்டு இன் புரொஃபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.

 

"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிடமிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.

 

 

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.