Skip to main content

பாகிஸ்தான் நகரின் பெயரில் பேக்கரி; தேசியக் கொடியை ஏந்தி உடைத்த கும்பல்!

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

BJP vandalized Bakery named Pakistani city in hyderabad

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இருப்பினும், 10ஆம் தேதி இரவே பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை, இந்திய ராணுவம் அழித்து முறியடித்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நகரின் பெயரில் இருக்கும் பேக்கரி ஒன்றை, பா.ஜ.கவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில், ‘கராச்சி’ என்ற பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்ற நகர் பெயரில் இந்த பேக்கரி செயல்பட்டு வந்ததால், தேசியக் கொடி ஏந்தி வந்த ஒரு கும்பல் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டு கடையின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்