
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில், தாக்குதல் நிறுத்தம் குறித்து மே 12ஆம் தேதி இரு நாட்டுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று (12-05-25) பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், இரு நாட்டு ராணுவத் தலைமை இயக்குனர்கள் இடையே இன்று நண்பகல் 12 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.