
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவரது மனைவி வித்யா (60). வயதான இந்த தம்பதி, தங்களது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள் சிலர் அந்த கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும், நீண்ட நேரமாக கடையில் இல்லாமல் இருந்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வயதான தம்பதியின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு, தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இதில், பாஸ்கரன் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாஸ்கரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொடூரமாக செய்யப்பட்டு கிடந்த தம்பதியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.