Skip to main content

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும்! -கராத்தே தியாகராஜன் அதிரடி! 

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 


காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜிவ்காந்தியின் 75 -வது பிறந்தநாளை தேசம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். ராஜிவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
 

Karate R. Thiagarajan



தென்சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜிவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தென்சென்னை மாவட்ட காங்கிரசின் முன்னாள் தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன். 
 

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "சென்னை மாநகராட்சியின் எல்லை மிகப் பெரியது. தமிழகத்தில் ஒன்னரை சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மேயர் இருக்கும் மாநகராட்சியெல்லாம் இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் ஒன்னரை தொகுதிதான் இருக்கிறது. ஆனால், சென்னையிலுள்ள 22 சட்டமன்ற தொகுதிக்கு ஒரே ஒரு மேயர் தான். மேலும், 200 வார்டுகள் மாநகராட்சியில் அடங்கியுள்ளது. மற்ற மாநகராட்சியிலுள்ள வார்டுகளில் மக்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 10,000 பேர் தான். ஆனால், சென்னையில் ஒரு வார்டில் 35 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. நிர்வகிப்பதிலும் அதிகாரிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். 


 

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மிகப்பெரியதாக இருந்த டெல்லி மாநகராட்சியை பிரித்தார். அதேபோல, நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல, நீண்ட நெடிய எல்லைகளைக்கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியை 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும். அதாவது, தென்சென்னை மாநகராட்சி, வட சென்னை மாநகராட்சி, மத்திய சென்னை மாநகராட்சி என 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொள்கிறேன்" என்றார் தியாகராஜன். 




தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காமராஜர் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கல்லூரியில் நடந்த மோசடி தொடர்பாக இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் இயக்குநர், கே.எஸ். அழகிரிக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கே.எஸ். அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர் மறுக்கும் பட்சத்தில், தலைவர் பதவியிலிருந்து அழகிரியை சோனியாகாந்தி நீக்க வேண்டும்" என்கிறார் மிக ஆவேசமாக தியாகராஜன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.