Skip to main content

இன்னும் வீசுகிறதா எம்.ஜி.ஆர் அலை? 

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

mgr

 

எம்.ஜி.ஆர் மறைந்து 33 வருடங்களாகிவிட்ட போதிலும் இன்னும் அவருடைய பெயர் தமிழக அரசியலில் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது. திமுகவிலிருந்து 1972ஆம் ஆண்டு பிரிந்த எம்.ஜி.ஆர் அதே ஆண்டு அதிமுகவை தொடங்கி, அடுத்த ஐந்து வருடங்களில் நடக்க இருந்த தேர்தலுக்கு ஆயத்தமானார். தனது சினிமா புகழ் எப்படி திமுக அரசியலுக்கும், ஆட்சிக்கும் உதவியதோ, அதேபோல தன்னுடைய அரசியலுக்கும் உதவும் என்ற நம்பிக்கையோடு தன்னுடைய அடுத்த தேர்தலுக்குத் தயாரானார் எம்.ஜி.ஆர்.  நேற்று இன்று நாளை (1974), இதயக்கனி (1975), இன்று போல் என்றும் வாழ்க (1977) உள்ளிட்ட படங்கள் அதிமுக தொடங்கியபின் வெளியானவை. இவற்றில்தான் அதிமுகவின் அரசியல் என்ன மாதிரியானது என்பதை மறைமுகமாகப் பரப்புரை செய்திருக்கிறார். 

 

இதுமட்டுமல்லாமல் அவருடன் இருந்த ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசு போன்ற பலர் எம்.ஜி.ஆரின் அரசியலுக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றனர். என்னதான் தன்னுடைய பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்றாலும், அது வேறு, அரசியல் வேறு என்பதை முன்பே புரிந்துகொண்டு ஐந்து வருட காலம் தான் உருவாக்கிய கட்சியை வளர்த்தெடுத்து, வெற்றிபெறச் செய்தார் எம்.ஜி.ஆர். அதன்பின் அரசியலில் பெரிதும் சோபிக்கமாட்டார் என்று கணக்குப் போட்டவர்களுக்கு, தவறெனப் புரிய வைத்து தொடர்ச்சியாக மூன்று முறை வென்று காட்டியிருக்கிறார். அந்த பத்து வருட கால ஆட்சியில், எம்.ஜி.ஆர் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றையும் முறியடித்துதான் வென்றிருக்கிறார். 

 

இந்த தொடர்ச்சியான மூன்று வெற்றியைதான் தற்போது அரசியலுக்கு வருபவர்கள் விரும்புகிறார்கள் எனத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் நலத் திட்டங்களும் இருக்கின்றன, அதே அளவில் பொருளாதார இறக்கம், சில அடக்குமுறை போன்ற விமர்சனங்களும் இருந்தன. இந்த சூழலில், எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டுவரப் போகிறோம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் அரசியல் ரேஸுக்கு தயாராகுபவர்கள். எம்.ஜி.ஆரின் மோனோபோலியாக இருந்த அதிமுக, ஜெயலலிதா என்னும் மற்றொரு ஆளுமை கையில் கிடைத்தபோது அது வேறாக மாறியது. அப்போதிலிருந்து இப்போதுவரை அதிமுகவில் எம்.ஜி.ஆர். பேசப்பட்டாரோ இல்லையோ, ’அம்மா, அம்மா’ என்று ஜெயலலிதா பெருமளவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட ‘மாண்புமிகு அம்மாவின் ஆட்சி...’ என்றுதான் முதல்வர் பழனிசாமி தொடங்கி அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வரை மேடை ஏறினாலே சொல்கின்றனர். தற்போதைய ஆட்சி என்பது மறைந்த ஜெயலலிதாவினால் உருவானது. அதனால், இதை அம்மா ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். ஆனால், எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசு ஜெயலலிதா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். அதை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

 

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான களம் தற்போதிலிருந்து சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக இடையே வார்த்தைப் போர் தொடங்கி பின்னர் அடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் யாருக்கு என்கிற உரிமைக்குரல் தற்போது உருவாகியிருக்கிறது. 

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அண்மையில் மதுரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோது மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றார். அதேபோல ட்விட்டரில்,  “புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்” என்று இப்பதிவுடன் எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் கமலுக்கு சால்வை போற்றும் பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அடுத்த சட்டமன்ற தேர்தல் களத்தில் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்த ரஜினி, அதற்கு ஆரம்ப விதைப்போட்டது 2018ஆம் ஆண்டில்தான்.  “அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றியவர் அவர். இன்று நான் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதும் முக்கிய காரணம் அவர்தான். அவரின் சிபாரிசில் தான் என் திருமணம் நடைபெற்றது. நான் இவ்வாறு பேசுவதால் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை இழுக்கப் பார்க்கிறார் என என்னைக் கூறுவார்கள்” என்று எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் பேசியிருந்தார். ரஜினி அரசியல் குறித்துப் பேசுபவர்களும்கூட எம்.ஜி.ஆர் ஆட்சியைப்போல இருக்கும் என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.

 

திருவள்ளுவர் தொடங்கி தற்போது பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, இடையில் எம்.ஜி.ஆரையும் தங்கள் லிஸ்ட்டில் இணைத்துக்கொண்டது. பாஜகவின் வேல் யாத்திரை சமயங்களில் கொடிகள், பேனர்கள் என அனைத்திலும் எம்.ஜி.ஆர் இடம்பெற்றிருந்தார். இவர்களும் எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியைக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். 

 

விஜயகாந்த் அரசியலுக்குள் வரும்போது கூட, கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஊரெங்கும் அவர்களுடைய ரசிகர்கள் பேனர்கள் வைத்தனர். எம்.ஜி.ஆர் தொப்பியை அணிந்துகொண்ட விஜயகாந்த் சிரிப்பது போன்ற ஓவியங்கள் பல சுவர்கள், பைபாஸ் மேம்பாலங்களிலும் இடம்பெற்றன. இவை அனைத்தும் அதிமுக பெருமளவில் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்த மறந்துவிட்டது என்பதை உணர்த்துகிறதா? இல்லை, எம்.ஜி.ஆர் அலை இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.