Skip to main content

கட்சி பொது செயலாளர் வேணும்னா முதல்வர் பதவி கிடையாது!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

கவர்னர் சந்திப்புக்கு பின் அமித்ஷாவை அதிமுக அமைச்சர்களான வேலுமணியும்,தங்கமணியும் சந்தித்தனர்.. இந்த சந்திப்பு தான் தங்கமணிக்கும் வேலுமணிக்கும் உண்மையான அரசியலை புரிய வைத்திருக் கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி தொடர்பாளர்கள், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த மனுவை அமித் ஷாவிடம் தந்தனர். அதைப்பார்த்த அமித்ஷா, "மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படுவதில்லைங்கிற குற்றச்சாட்டு உங்க அரசு மீது இருக்கிறது. கூடுதல் நிதி கொடுத்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும். மக்களுக்கு என்ன பயன்? மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை ஒழித்துவிட்டுத்தான் கூடுதல் நிதி கொடுப்பதாக திட்டம். அதனால் கூடுதல் நிதி இப்போதைக்கு கிடையாது' என அழுத்தமாக சொல்லிவிட்டாராம் அமித்ஷா. மேலும், "உங்களுடைய தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்' என உங்க அமைச்சர் ஒருவர் பொதுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இதுதான் உங்க நாகரீகமா? உங்கள் ஆட்சியை காப்பாத்திக்க எடுத்த நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட பா.ஜ.க. வெற்றிக்கு நீங்கள் உழைக்கவில்லை. இதுதான் உங்களின் கூட்டணி தர்மமா? ப.சிதம்பரத்துடன் நீங்கள் கடைசி நேரத்தில் நட்பு பாராட்டுவதாகத்தான் முதலில் எனக்கு சொல்லப்பட்டது. ஆனா, காங்கிரஸின் வெற்றிக்கு தேர்தல் நிதியையும் சிதம்பரத்திடம் கொடுத்திருக்கிறீர்கள். இது துரோகம்தானே!

 

admk



இதில் உங்கள் முதல்வருக்கு எதிராக ஊழல் ரிக்கார்டுகள் நிறைய இருக்கிறது. அதனால், ஊழல்களுக்கு இடமளிக்காமல் ஆட்சி நடத்தச் சொல்லுங்கள். கவர்னர் உங்களை கண்காணித்தபடிதான் இருக்கிறார்' என காட்டமாகப் பேச, பதில் பேச முடியாமல் திணறியிருக்கிறார்கள் அமைச்சர்கள் இருவரும்.

 

minister



ஒரு கட்டத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, "இந்த ஆட்சி உங்களுக்கானது. பா.ஜ.க.வுடன் தொடர்ந்து பயணிக்கவே நாங்கள் விரும்புகிறோம்' எனச் சொல்லி அமித்ஷாவை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். அமித்ஷாவின் கோபம் மெதுவாக தணிந்ததை உணர்ந்து, ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. ஆனாலும், ஆட்சியை கவிழ்க்க மிகக் கடுமையாக திட்டமிடுகிறது தி.மு.க. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வளைக்க குதிரை பேரம் பேசுகிறார்கள். அதனை தடுத்து நிறுத்தும் வகையில், தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தான் பாடம் புகட்ட வேண்டும்' என அமைச்சர்கள் சொல்ல, "தி.மு.க.வை டிஸ்டர்ப் பண்ண முடியாது. தற்போதைய சூழல் அவர்களையும் நாங்கள் நட்பாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்க்கட்சின்னா எல்லா தந்திரங்களையும் பயன்படுத்தத்தான் செய்வார்கள். அதனால் ஆட்சியை காப்பாத்திக்கிறது உங்கள் பொறுப்பு. நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும். இதில் எந்த உதவியையும் டெல்லியிலிருந்து எதிர்பார்க்க வேண்டாம். எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கத் தெரியாதவர்களால் ஆட்சி செய்ய முடியாது'' என அட்வைஸ் செய்திருக்கிறார் அமித்ஷா.

 

bjp



மத்திய அரசை வைத்து தி.மு.க.வை மிரட்டலாம் என கணக்குப் போட்டிருந்த தமிழக அமைச்சர்களுக்கு அமித்ஷாவின் பேச்சு ஏமாற்றமளித்திருக்கிறது. அதேபோல, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேச்சு எழுந்த போது, ஓ.பி.எஸ்.சின் நடவடிக்கைகளை பற்றி அமைச்சர்கள் அதிருப்தி தெரிவிக்க, "ஆரம்பத்திலிருந்தே அவருக்குரிய முக்கியத்துவத்தை நீங்கள் தரவில்லை என்பது எங்களுக்கு தெரியும். இது குறித்து ஒருமுறை பிரதமரும் உங்களிடம் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் ஓ.பி.எஸ்.சை நீங்கள் மதிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பது போல கட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற எடப்பாடி நினைக்கிறார். இது தவறானது. எங்களது பேச்சை நம்பி அ.தி.மு.க.வில் இணைந்த அவரது அபிலாசைகளை நாங்கள் புறந்தள்ளி விட முடியாது.


அதனால், ஆட்சியிலும் கட்சியிலும் இப்போதுள்ள இரட்டை தலைமையை ஒப்புக்கொண்டு இருவருக்குமான அதிகாரப் பகிர்வுகளை எடப்பாடி பழனிச்சாமியை செய்யச் சொல்லுங்கள். இல்லையெனில், கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ்.சை நியமியுங்கள். எடப்பாடி முதலமைச்சராக மட்டும் இருக்கட்டும். மாறாக, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி ஆசைப்பட்டால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லுங்கள்' என அமித்ஷா கட்டளையிட, மீண்டும் பதில் பேச முடியாமல் திணறியிருக்கிறார்கள் அமைச்சர்கள். இப்படி அட்வைசும் கட்டளையுமாக இருந்துள்ளது அமித்ஷாவுடனான அமைச்சர்களின் சந்திப்பு' என சுட்டிக் காட்டுகிறார்கள் டெல்லி தொடர்பாளர்கள்.

  admk



டெல்லியிலிருந்தபடியே அமித்ஷா சந்திப்பில் நடந்ததை எடப்பாடியிடம் அமைச்சர்கள் விவரிக்க, ஏகத்துக்கும் அதிர்ந்து போனார் எடப்பாடி. உடனே ஓ.பி.எஸ்.சை தனது இல்லத்துக்கு வரவழைத்து டெல்லியில் நடந்ததை சொல்லாமல் சமாதானம் பேசிய எடப்பாடி, நாளைக்கு நடக்கும் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யாரையும் பேச அனுமதிக்க வேண்டாம். வழக்கம் போல தலைமையிலுள்ள ஐவர் மட்டும் பேசிவிட்டு கூட்டத்தை முடித்து விடலாம். சட்டமன்ற கூட்டம், ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய இந்த மூன்றும் முடியட்டும். அதன்பிறகு எல்லாவற்றுக் கும் தீர்க்கமான முடிவெடுப்போம். அதுவரையில் எந்த பிரச்சனையும் வேண்டாம்'' என சமாதானம் பேச, அதனை ஒப்புக்கொண்டிருக் கிறார் ஓ.பி.எஸ்.! அதன்படி மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தினை எந்த சச்சரவுமில்லாமல் முடித்த எடப்பாடியை அமித்ஷாவின் கட்டளைகள் பதட்டத்திலேயே வைத்திருக்கின்றன.

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.