Skip to main content

18 நாட்களில் 1700  கி.மீ. தூரத்தை கடந்த புறா; தமிழக அளவில் முதலிடம்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

இரு நாடுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலை தொடர்பு சாதனமாக இருந்தது "தூதுப் புறாக்கள்". கண்டம் விட்டு கண்டம் போய் தகவல்களை கொடுத்து விட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் ஆற்றல் பெற்றது ஹோமர் வகை புறாக்கள். அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் கூட இன்று வரை தூதுப் புறாக்கள் பந்தய புறாக்களாக வளர்த்து மகிழ்கின்றனர் பலர். எந்த ஊரில் கொண்டு போய் விட்டாலும் தன் நுண்ணறிவை பயன்படுத்தி தன்னை வளர்த்த இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறது புறாக்கள்.

 

1918 - 1919 காலக் கட்டத்தில் உலகப் போரில் செமி என்கிற புறா தனது ஒற்றைக் காலை இழந்து சுமார் 2 ஆயிரம் போர் வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த புறாக்கள் இன்று தூது செல்ல பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அதனை வளர்த்து இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காகவே பல கிளப்கள் உள்ளது.

 

சமீபத்தில் டிஆர்பிஎஃப் அமைப்பின் மூலம் டெல்லியில் உள்ள ஜான்சியில் நடந்த புறாப் பந்தயத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை, சேலம் உள்பட பல மாவட்ட கிளப்களில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் கலந்து கொண்டது. இதில் தஞ்சை மாவட்ட கிளப்பில் மூலம் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் என்பவரின் சுரையா தியாப்ஜி என்ற புறா 18 நாட்களில் 1700 வான்வழி கி மீ தூரத்தை (தரைவழி 2100 கி.மீ) கடந்து இந்தியாவில் 4 வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

இது குறித்து சாதனை புறா சுரையா தியாப்ஜியின் உரிமையாளர் ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் நம்மிடம் பேசுகையில், "நான் 25 வருடமாக புறாக்கள் வளர்க்கிறேன். புறாக்களை வீட்டில் வளர்ப்பது தரித்திரம் என்பார்கள். என்னிடமே பலர் சொன்னார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து பறவைகளையும் போல சுதந்திரமாக தான் வளர்க்கிறேன். 'பரன்பரை லாப்ட்' என்ற பெயரில் பரம்பரையை நினைவூட்டும் வகையில் பறவைகளின் தங்குமிடம் அமைத்திருக்கிறேன்.

 

என்னுடைய புறாக்களுக்கு மறைந்த தேசத் தலைவர்களின் பெயர்களை நினைவு கூறும் வகையில் தான் பெயர்கள் வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு சுபாஷ் சந்திர போஸ் என்ற புறா 9.45 மணி நேரத்தில் 600 கி.மீ (வான்வழி தூரம்) தூரத்தை கடந்தது. இதே போல பல சாதனைகளை என்னுடைய புறாக்கள் சாதித்துள்ளது. இப்போது வந்த சாதித்துள்ள சுரையா தியாப்ஜி என்ற புறா நமது தேசிய கொடி வடிவமைத்தவர் பெயரை வைத்திருக்கிறேன். இந்த புறா தான் தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

புறாக்களை வளர்க்க அதற்கென பிரத்யேக உணவுகளை வாங்கி கொடுப்பதில்லை. நம்ம ஊரில் விளையும் சிறு, பெருந் தானியங்களையும், வழக்கமான தண்ணீரும் தான் கொடுக்கிறோம். பிரத்யேக உணவு கொடுக்கும் போது இலக்கை எட்டும் போட்டிக்கு அனுப்பினால் தான் முன்பு சாப்பிட்ட உணவைத் தேடி அலையும். ஆனால் வழக்கமான சிறுதானியம் கொடுப்பதால் பந்தய காலத்தில் இரை தேடி அலையாமல் கிடைத்த இரையை உண்டு கிடைத்த இடத்தில் ஓய்வெடுத்து இலக்கை நோக்கி விரைவாக வந்துவிடும். அப்படித் தான் இந்த சுரையா தியாப்ஜி திட்டமிட்ட பயண நேரம் 21 நாட்கள் என்பதை குறைத்து குறிப்பிட்ட இலக்கான ரெத்தினக்கோட்டைக்கு 18 நாட்களிலேயே வந்து சாதித்துள்ளது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

அதே நேரம் பிரத்யேக உணவு கொடுத்து பழக்கி இருந்தால் அந்த உணவை தேடி திசைமாறி சென்று இருக்கும். போட்டி நடத்தும் நிர்வாகம் தனி ஆப் மூலமே அனைத்தையும் கண்காணிக்கிறது. எல்லையிலிருந்து புறா பயணம் தொடங்கும் முன்பு காலில் ஒரு வளையம் அணிவித்து வெளியே ஒரு குறியீடு, உள்ளே ஒரு ரகசிய குறியீடு வைத்திருப்பார்கள். அதே போல சிறகிலும் குறியீடுகள் எழுதி வைத்திருப்பார்கள். முதலில் ஒரே மூச்சாக 300 வான்வழி கி மீ தூரம் பறக்கும் புறா பிறகு தொலைவை நுண்ணறிந்து உடலை சரி செய்து கொண்டு பயண தூரத்தை குறைத்துக் கொள்ளும். ஒரு நாள் முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் பறக்கும் அடுத்தடுத்த நாட்களில் கிடைக்கும் உணவு, தண்ணீர் உண்பதுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓய்வெடுத்து பிறகு பறக்கும்.

 

தான் வளர்ந்த இடம் வந்தடைவதே இலக்கு. அங்கு வந்ததும் புறா சிறகில் உள்ள குறியீடு, கால் வளையத்தில் உள்பக்கம் வெளிப்பக்கம் உள்ள குறியீடுகள், புறாவின் நிறம் போன்றவற்றை படங்கள், வீடியோ எடுத்து போட்டி நிர்வாகத்திற்கும், அதற்கான ஆப்பிலும் அனுப்பிய பிறகே தேர்வு செய்வார்கள். ஒரு இடத்தில் குஞ்சாக வளர்க்கப்படும் புறா வேறு எந்த தேசத்தில் கொண்டு போய் விட்டாலும் பறந்து வந்துவிடும். அந்த அளவிற்கு நுண்ணறிவு அதிகம். சாதனைப் புறாக்களை ஆசைப்பட்டு வாங்கிட்டு போனாலும் கூட எத்தனை ஆண்டுகள் ஆனால் பழைய இடத்திற்கே வந்து விடும். இந்த புறாக்களின் பிறப்பிடம் இந்தியா தான் என்றாலும் இங்கிருந்து வெளிநாடு போய் அங்கிருந்து நாம் வாங்கி வருகிறோம். அழிந்த இனங்களை மீட்கும் முயற்சியே என் புறா வளர்ப்பு" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.