
மத்திய உள்துறை அமித் ஷா தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த சமூகத்தை பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் நடத்துகின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இது குறித்து பிரதமர் மோடியே கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை செய்தி குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்கள் கவலைப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா, “தொகுதி மறுசீரமைப்பு நடத்தும்போது புகார் கொடுக்க யாருக்கும் காரணம் இருக்காது. யாரும் அதிருப்தி அடையாமல் சமநிலையோடு தொகுதி மறுசீரமைப்பை நடத்துவோம். தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள் பங்கு குறையாது. 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஹரியான போல பா.ஜ.கவிற்கு பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் வெற்றி கிட்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா, “பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றும். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார். ஆங்கில மொழி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா ஆட்சேபணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது. மொழி விவகாரத்தில் மக்கள் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்கள்” என்று கூறினார். தென்மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “2004 முதல் 2014 வரை 18 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.70 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது” என்று கூறினார்.