Skip to main content

“அமித் ஷா சமத்துவத்தைப் பார்த்து பயப்படுகிறார்” - அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு

Published on 21/06/2025 | Edited on 21/06/2025

 

Anbil Mahesh criticized Amit Shah English amid row

இந்தி திணிப்புக்கு எதிராகவும், இருமொழி கொள்கையிலும் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தை, தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா,  “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூக சூழல் உருவாகும் நாள் வெகு தூரம் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது நாட்டின் மொழிகள், நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லையென்றால், நாம் முழுமையான இந்தியர்களும் இல்லை. அந்நிய மொழிகளுடன் இந்திய மொழியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்தியாவின் நாகரீகத்தையும், ஆன்மீகத்தின் வேர்களையும் வெளிநாட்டு மொழிகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

அரைகுறையான வெளிநாட்டு மொழிகளால், முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த போர் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்தியச் சமூகம் இதில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சுயமரியாதையுடன் நமது சொந்த மொழிகளால் நாம் நமது நாட்டையும் வழி நடத்துவோம், இந்த உலகத்தையும் வழி நடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை” என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அமித் ஷா பேசிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது மொழியை பற்றியது அல்ல, இது கட்டுப்பாட்டைப் பற்றியது. மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அவர் ஆங்கிலத்தை பார்த்து பயப்படவில்லை, அவர் சமுத்துவத்தை பார்த்து பயப்படுகிறார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்