Skip to main content

முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

kp munusamy

 

அ.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்., இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என செயற்குழு முடிவெடுத்திருப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார். 

 

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்து கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க.வில் வெடித்தபடி இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதெல்லாம் முடியாது; தேர்தல் முடிந்ததும் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அதற்கு முன்பாக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்தினார். 


இதனால், இரு தரப்பு ஆதரவாளர்களும் முஷ்டியை உயர்த்துவதால் சமீபகாலமாக அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்த நிலையில், இதுகுறித்து செயற்குழுவைக் கூட்டி விவாதிப்பது என அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. அதனால், அ.தி.மு.க.வின் செயற்குழு மீது, மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதன்படி, இன்று (28-ஆம் தேதி) காலையில் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழு கூடியது. 


கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமார் நாலரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், காரசார விவாதங்களும் நடந்துள்ளன. ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படாமல், இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் இணைந்து முடிவெடுக்க செயற்குழுவில் ஒப்புதல் அளித்து கூட்டத்தை முடித்திருக்கிறார்கள். 


"முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும்" என எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் களமிறங்கினர். அவர்கள், "கட்சியை இரட்டைத் தலைமையில் வழி நடத்திச் செல்லும் போது, முதல்வர் வேட்பாளர் என ஒருவரை முன்னிறுத்துவது நிறைய குழப்பங்களை உருவாக்கும். அதனால், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிக்காட்டுதல் குழு அமைக்க வேண்டும். அதனை அமைப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல் வந்து விடப்போகிறது‘’ என எகிறியிருக்கிறார்கள். 

 

Ad


இதே ரீதியிலேயே விவாதங்கள் நடந்த நிலையில், கடைசியில், "முதல்வர் வேட்பாளர் அறிவித்து தேர்தலைச் சந்திக்கலாமா? அல்லது இரட்டை தலைமையிலேயே தேர்தலைச் சந்திக்கலாமா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை இருவர் வசமும் செயற்குழு ஒப்படைக்கிறது. இருவரும் கலந்துப்பேசி ஒரு வாரத்தில் முடிவுக்கு வாருங்கள்’’ என்று முதல்வர் வேட்பாளர் பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அ.தி.மு.க செயற்குழு.

 

 

 

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

“அது தான் அதிமுகவுக்கு விழுந்த முதல் அடி” - திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
DMK candidate Prakash interviewed and says That was the first blow to AIADMK

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

அ.தி.மு.க வேட்பாளர்கள் எல்லாம் சாதாரண பின்னணி கொண்டவர்கள். ஆனால், தி.மு.க நிறுத்தும் வேட்பாளர்கள் எல்லாம் பொருளாதார பின்னணி கொண்டவர்களையும், வலுவான ஆட்களை தான் நிறுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

“நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். சாதாரண வேட்பாளராக தான் நிற்கிறேன். அதனால், இந்த ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் பணமா? குணமா?. அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள்”.

ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுக்கும் இந்த திட்டத்தில் நிதிச்சுமை இருக்கிறது என்று நீங்கள் சொல்கின்ற இந்த நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி வருகிறதே?

“சாதாரண, அதானி அம்பானிக்கு எப்படி இத்தனை லட்சம் கோடி இன்றைக்கு வந்தது. ரெண்டு பேருக்கு மட்டும் குவியும் பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க போகிறோம் அவ்வளவுதான்”.

அகில இந்திய அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், தி.மு.க.விற்கு அமைச்சரவையில் எந்த மாதிரியான மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“எங்களுக்கு பதவி என்பது ஒரு பொறுப்பு தான். வாஜ்பாய் ஆட்சியிலும் அண்ணன் டி.ஆர். பாலு இருந்திருக்கிறார். அதேபோல், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலும் டி.ஆர்.பாலு இருந்திருக்கிறார். மந்திரி சபை என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை இந்திய நன்றாக இருக்க வேண்டும், இந்தியா வலுப்பெற வேண்டும், சிறந்த ஆட்சி கொடுக்க. அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவருடைய குறிக்கோள். அந்த குறிக்கோளுக்கு பின்னாடி எங்களுடைய இந்தியா கூட்டணியினுடைய 40 வேட்பாளர்களும் பின் தொடர்ந்து செல்வார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்”.

அ.தி.மு.க என்றால் கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் என்றால் அ.தி.மு.க தான், என்ற அந்த நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று சொல்கிறார்களே?

“அந்த நம்பிக்கை எல்லாம் உள்ளாட்சி தேர்தலிலே உடைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில், அவர்கள் எந்த ஒரு மாநகராட்சியும் பிடிக்கவில்லை, எந்த ஒரு நகராட்சியும் பிடிக்கவில்லை. எல்லாமே தி.மு.க. பிடித்து விட்டது. அதுதான் அவர்களுக்கு முதல் அடி. இனிமேல் அடிமேல் அடி விழும். இனி, அதிமுகவுக்கு மேற்கு மண்டலமோ, கொங்கு மண்டலமோ அவர்களது கோட்டை கிடையாது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வின் கோட்டையாக மாறப்போகிறது. ஏழு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த ஏழு நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், நோட்டாவும் யார் முன்னாடி வருவார்கள் என்று போட்டி போடுவார்கள். இந்த ஏழு தொகுதிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலே அவர்கள் கோட்டை எல்லாம் உடைந்து விட்டது”.

இந்திய கூட்டணியில் திமுக டெபாசிட் கூட வாங்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“அவர் எடப்பாடியில் தூங்கி கொண்டே இருப்பார் போல. வெளியே வந்து பார்க்க சொல்லுங்கள். ஏனென்றால், அவர் கட்சியையே எடப்பாடியில் தான் நடத்துகிறார் என்று அவரது கட்சிகாரர்களே சொல்கிறார்கள்”.

370, 400 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“மோடி தூக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். உறுதியாக சொல்கிறேன் 400 தொகுதிக்கும் மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நூறு தொகுதிகளில் தான் பாஜக வெல்லும்”.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் இத்தனை கூட்டங்களில் பேசியும் ஒரு கூட்டத்தில் கூட விவசாயிகளைப் பற்றி பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே?

“அவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு, விவசாயிகளின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாரே. எத்தனையோ பிரச்சினைகள் இருந்திருக்கிறது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை நாம் உருவாக்கினோம். ஆனால் அவர்கள் பத்தாண்டு கால கட்சியில் அதை செய்ய முடியவில்லை. அவர் ஒரு போலி விவசாயி என்று தான் சொல்வேன். மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், எங்களுடையது விவசாயிகளை காப்பாற்றக்கூடிய அரசு”.

தி.மு.க மீண்டும் வந்துவிட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி கூறுகிறாரே?

“காமெடியாக இருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே நாங்கள் சொல்லிவிட்டோம். திருப்பி அந்த டயலாக்கை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்றைக்கு இருந்த அ.தி.மு.க வேறு. அது எம்ஜிஆருடைய அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு இருப்பது வியாபார அ.தி.மு.க. அதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் புரிந்து  விட்டார்கள்” என்று கூறினார்.