Skip to main content

அம்பேத்கர் சிலை உடைப்பு...வேதாரண்யம் ஜாதி மோதலின் பின்னணி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலை கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம். வேதாரண்யம் அருகிலுள்ள ராஜகாளிகாட்டைச் சேர்ந்தவர் பாண்டியன். முக்குலத்துப் புலிகள் அமைப்பின் மாணவரணி மா.செ.வாக இருக்கிறார். இவருக்கும் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி மோதல் ஈடுபட்டு, வழக்காகவும் மாறியிருக்கிறது.

 

public issues



25-ந் தேதி மாலை தனது சகாக்களுடன் வேதாரண்யத்தில் சென்று கொண்டிருந்த பாண்டியனின் கார், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற இளைஞரின்மீது மோதியது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன அவரது சமுதாய இளைஞர்கள் சிலர் ஓடிவந்து ராமச்சந்திரனை மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் செய்தி ராமகிருஷ்ணாபுரத்தில் பரவ, அங்கிருந்து ஓடிவந்த இளைஞர்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியனின் காரை சாவகாசமாக அடித்து நொறுக்கிவிட்டு, தீயிட்டுக் கொளுத்தினர்.
 

issues

பாண்டியனின் கார் கொளுத்தப்பட்ட செய்தி வேதாரண்யம் முழுவதும் உள்ள அவரது சமுதாய இளைஞர்களுக்கு தெரியவர, அரிவாள், கடப்பாரைகளோடு பெருங்கூட்டமாக திரண்டுவந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ரகளை செய்தனர். காக்கிகளிடம் இருந்து இந்தமுறையும் எதிர்வினை இல்லை. தொடர்ந்து அந்த இளைஞர்கள், காவல்நிலையத்திற்கு எதிரே பேருந்துநிலைய வாசலில் இருந்த அம்பேத்கர் சிலையின் தலையை வெட்டி உருட்டிவிட்டு, வெறித்தனமான குதூகலத்துடன் அங்கிருந்து வெளியேறினர். அடுத்துவந்த கூட்டம், தலையில்லாத அம்பேத்கர் சிலையை கடப்பாரை, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தியது. அதோடு நிறுத்தாமல் பட்டியலின சமுதாயத்தின ரின் கடைகளாக தேடித்தேடி அடித்து நொறுக்கினர். மாலை 5.15க்கு தொடங்கிய இந்த அலப்பறைகள், 6.05-க்கு நாகையில் இருந்து காவலர்கள் வந்து தடை உத்தரவு பிறப்பிக்கும்வரை நீடித்தது.

பதற்றம் தொற்றிக்கொள்ள, வேதாரண்யத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் முதல்வர் பழனிசாமியிடம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருமாறு முறையிட்டனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் பழனிசாமி, உடனடியாக சேலம் ஆத்தூரில் இருந்து 6 அடிஉயர அம்பேத்கர் சிலையைக் கொண்டுவந்து, பழைய சிலை இருந்த இடத்திலேயே நிறுவி பதற்றத்திற்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார். ""இந்த சம்பவத்தில் தொடர் புடைய முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல சமுதாயத்தினரும் இதில் அடக்கம். பாண்டியனை தேடி வருகின்றனர்''’என்றனர் அப்பகுதி வாசிகள் நம்மிடம்.

வேதாரண்யத்தின் பதற்ற நிலை அறிந்திருந்தும், அங்கி ருந்து வேளாங்கண்ணிக்கு பாதுகாப்புக்காக காவலர்களை அனுப்பி வைத்துள்ளனர் அதிகாரிகள். வேளாங்கண்ணி சர்ச்சுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து என்ற உளவுத் தகவலே இதற்குக் காரணம். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத் தைக் கண்டித்து வி.சி.க., இடதுசாரி கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்த காவல்துறையினரிடம் கேட்டோம்.…""டெல்டாவில் வளர்ந்துவரும் சாதிய அமைப் பாக இருக்கிறது முக்குலத்து புலிகள் அமைப்பு. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அதே சமுதாய கட்சிகளோடு ஈடுகொடுக்க தனது இளைஞர் களை உசுப்பேத்துவதை முக்குலத்து புலிகள் அமைப்பு சமீபத்திய வேலையாக செய்து வருகிறது. இங்குள்ள அம்பேத்கர் சிலையை அகற்றவேண்டும் என தொடர்ந்து பேசி சர்ச்சைக்கு ஆளாகிவருகிறார் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன்.


தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்து தலைவரான இமானுவேல் சேகரின் நினைவுதினமான செப்டம்பர் 11-ல்தான், ஆறு.சரவணனுக்கு பிறந்ததினம். அந்தநாளில் இமானுவேல் சேகரனுக்காக ஒட்டப்படும் போஸ்டர்களை மறைத்து தன் பிறந்ததின போஸ்டர்களை, ஒட்டுவதால் மோதல்களும் வெடித்துள்ளன.

சிலமாதங்களுக்கு முன்னர் தமிழக தேவேந்திர குல மக்கள் இயக்கத் தலைவரான குமுளி ராஜ்குமார், ராமகிருஷ்ணா புரத்தில் நடந்த திருமண விழாவுக்கு வந்திருந்தார். அவருக்கு பிரம்மாண்ட வர வேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை அழைத்துச் செல்வதற்காக வந்தவர்களில் சிலர், எதிரே வந்த முக்குலத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை விலகிப்போகச் சொல்லி அடித்துள்ளனர். இதையறிந்த ஆறு.சரவணன், குமுளி ராஜ் குமாரை கைதுசெய்யச் சொல்லி வாய்மேட்டில் சாலைமறியலில் இறங்கினார். வேறுவழியின்றி கோபாலசமுத்திரத்தில் குமுளி ராஜ்குமாரைக் கைதுசெய்து, சிலர்மீது குண்டாஸும் போட்டார்கள். அதிலிருந்து வெளியில் வந்தவர்களுக்கும் முக்குலத்து புலிகள் அமைப் பின் பாண்டியனுக்கும் அடிக்கடி சண்டை மூண்ட நிலையில், சிலை உடைப்பில் முடிந்திருக்கிறது''’என்றனர் விரிவாக.

தேசத்தின் அடையாளம் சட்டமேதை அம்பேத்கர். அவர் அனைத்து மக்களுக்கு மானவர். அவரை சாதிய அடையாளமாக குறுக்கு வதும், அவரது சிலைகளைத் தகர்ப்பதும் மடமையின்றி வேறில்லை. சிலைகளைக் கடந்து சித்தாந்தமாக எப் போதும் உயர்ந்து நிற்கிறார் அம்பேத்கர். 

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.