Skip to main content

சேலம் மாநகராட்சியில் காய்கறி கடை ஒதுக்கீட்டில் ஊழல்!

Published on 28/06/2020 | Edited on 28/06/2020

 

salem corporation market peoples token


'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்கிற சொலவடை யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தாமல் போகலாம்; ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சிக்கு ரொம்பவே பொருந்தும். அன்றாடம் தெருவோரம் கடை விரித்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கும் சாதாரண சாலையோர காய்கறி வியாபாரிகளிடம்கூட போலி ரசீது மூலம் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டியிருப்பதாக சேலம் மாநகராட்சி மீது புகார்கள் எழுந்துள்ளன.

 

கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், காலை 08.00 மணி வரை காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, சேலம் ஆற்றோரம் மற்றும் ஆனந்தா இறக்கம் பகுதிகளில் இயங்கி காய்கறி கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன. 

 

இதையடுத்து, அவர்களுக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்டோர் காய்கறி கடை வைத்திருந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெறும் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், இடம் கிடைக்காதவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இடம் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்களிடம் தலா 1500 முதல் 5000 ரூபாய் வரை அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

salem corporation market peoples token

இந்நிலையில்தான், காய்கறி கடைகள் வைக்க ஒப்பந்தம் விடாமலேயே, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குண்டர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறு காய்கறி கடைக்காரர்களிடம் ஏகத்துக்கும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அதுவும், கரோனா ஊரடங்கின் பெயரில் போலி ரசீது மூலம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் காய்கறி வியாபாரிகள்.

 

இதுபற்றி, சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் பேசினர். சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதி, பஜார் தெரு ஆகிய இடங்களில் காய்கறிகள், பழங்கள் என 384 சாலையோர வியாபாரிகள் கடை போட்டு வந்தோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த கடைகளை எல்லாம் ஒரே நாளில் தடாலடியாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. பிறகு, பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியபோது, 100 பேருக்கு மட்டுமே கடை வைக்க அனுமதித்தனர்.

 

அங்கே இடம் கிடைக்காத காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் இன்று இடம் ஒதுக்குவார்கள், நாளை ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அன்றாடம் மாநகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். ஜூன் மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள், அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல், மே மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை நடத்த அனுமதி பெற்றவர்களுக்கே புதிய இடத்திலும் கடை நடத்த இடம் ஒதுக்கியுள்ளனர்.

salem corporation market peoples token

ஆளுங்கட்சி என்ற செல்வாக்கு இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு காசு கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே வணிக வளாகத்தில் கடை போட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வணிக வளாக பகுதியில் அனுமதி இல்லாத இடத்தில் மொத்த வியாபாரிகளிடம் தலா 5000 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக கடை நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அம்மாபேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், முதன்மை அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்தும் பயனில்லை.

 

சாலையோர காய்கறி கடைக்காரர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனாலும், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சாலையோர காய்கறி வியாபாரிகளிடம் அன்றாடம் சுங்கம் வசூலிக்கிறது. ஊரடங்கு காலத்தில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம்  வசூலிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது. அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

 

அப்படித்தான் வசூலித்துவிட்டுப் போகட்டும் என்றாலும், அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரே சீரியல் நம்பர் கொண்ட ரசீதுகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை பல லட்ச ரூபாய்களை மாநகராட்சி நிர்வாகம் சுருட்டிவிட்டது. மாநகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத குண்டர்கள், தினமும் காலையில் காய்கறி வியாபாரிகளிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை சுங்கம் வசூலித்துள்ளனர். 

salem corporation market peoples token

சுங்கம் வசூலிக்கும் குண்டர்களுக்கும் மாநகராட்சிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதையெல்லாம் கேள்வி கேட்டால், கண்ணியக்குறைவாக பேசுகிறார்கள். இப்படி போலி ரசீது போட்டு கொள்ளை அடிக்கும் தொகையெல்லாம் யாருடைய கல்லாவை நிரப்புகிறது என்று தெரியவில்லை,'' என்கிறார்கள் சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்.

 

காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடைக்கு தலா 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. ஆனால், சரக்கு லாரியில் இருந்து சந்தைக்கு கொண்டு வந்து இறக்கப்படும்போது ஒரு பெட்டி தக்காளிக்கு 10 ரூபாய் இறக்குக் கூலியாகவும்,  அதை சில்லரை வியாபாரிகளின் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்வதற்கு கிரேடுக்கு 20 ரூபாயும், கடை நடத்த 60 முதல் 550 ரூபாய் வரையிலும் சுங்கம் வசூலி க்கின்றனர். சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் அமலில் இருந்தபோது குத்தகைதாரர்கள் எந்தளவு வசூலித்தார்களோ, அதைவிட பல மடங்கு கட்டணத்தை மாநகராட்சி  நிர்வாகம் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு வசூலித்து வருகிறது.

salem corporation market peoples token

இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ராம் மோகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''சார்... ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருவதால் இனி அங்கு காய்கறி கடைகள் நடத்த முடியாது. அவர்களுக்கு சேலம் முதல் அக்ரஹாரம்,  நீலாம்பாள் மருத்துவமனை இறக்கம், கோட்டை மாரியம்மன் கோயில் பின்பகுதிகளில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதற்கான சுங்கம் வசூலிக்கும் புதிய ஏல ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1- ஆம் தேதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது. இனிமேல் அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் இயங்கும். மற்றபடி, நான் இந்த சீட்டுக்கு புதுசுங்க சார். எத்தனை கடைகளுக்கு அனுமதி என்ற விவரங்களை நீங்கள் ஏஆர்ஓவை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

salem corporation market peoples token

இதையடுத்து நாம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலர் (ஏஆர்ஓ) செந்தில்முரளியிடம் தொடர்பு கொண்டோம். ''வணிக வளாகத்தில் காய்கறி கடை நடத்துவோரிடம் சுங்கம் வசூல் பணிகளை இன்னும் யாருக்கும் ஏலம் விடவில்லை. அதற்கான ஒப்பந்தம் ஜூலையில் இறுதி செய்யப்படும். ஏப்ரல் முதல் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம்தான் நேரடியாக சுங்கம் வசூலிக்கிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா டூட்டி இருப்பதால், சுங்கம் வசூலிக்கும் பணிகளை வெளி ஆள்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் நமக்கு 'சப்போர்ட்டிங்' ஆக இருக்கிறார்கள். 

 

சுங்கம் வசூலிப்பதற்காக ஒரே சீரியல் நம்பரில் பல ரசீது போடப்பட்டதாக காய்கறி கடைக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க சான்சே இல்லீங்க. அவர்கள் 'பில்டப்' செய்து பேசுவதுபோல் தெரிகிறது. அது ஒண்ணுமில்லீங்க சார்... மொத்தம் 400 காய்கறி கடைக்காரர்கள் இருக்கிறார்கள். புதிதாக இடம் ஒதுக்கியபோது  பலருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் இப்படி புகார் சொல்கிறார்கள்,'' என்கிறார் செந்தில் முரளி.

salem corporation market peoples token

ஏற்கனவே சேலம் மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டேண்டு, கடைகளை குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர்தான், காய்கறி கடைக்காரர்களிடம் அடாவடியாக சுங்கம் வசூலித்து வருவதாக பல தரப்பிலும் சொல்லப்படுகிறது. அவர் நினைத்தால்தான் யார் ஒருவருக்கும் குத்தகை கிடைக்கும் என்ற அளவுக்கு மாநகராட்சி ஆணையருடன் நெருக்கத்தை வளர்த்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவரைப் பற்றியோ மாநகராட்சி தரப்பில் ஒருவரும் பிடிகொடுத்து பேசவும் மறுக்கிறார்கள்.

 

''எங்க தாத்தா, எங்க அப்பா ஆகியோரும் தெருவில்தான் காய்கறி கடை போட்டார்கள். நானும் அதே தெருவில்தான் கடை நடத்தி வருகிறேன். இப்படி காலங்காலமாக கேர் ஆப் பிளாட்பார்மாக இருக்கும் நாங்கள், என் பையனையாவது படிக்க வைத்து உத்தியோகத்துக்கு அனுப்பணும்னு நினைக்கிறோம். இந்த காய்கறி கடையால ஏதோ அரை வயித்து கஞ்சிக்குதான் வருமானம் வரும். இப்போது கொரோனா என்ற பெயரில் எங்களை ஒவ்வொரு இடமாக மாநகராட்சி அதிகாரிகள் அலை க்கழிப்பதோடு, அடாவடியாக சுங்கம் வசூலித்து வயிற்றில் அடிக்கிறார்கள். இதெல்லாம் நியாயம்தானா?,'' எனக் கேட்கிறார் ஒரு காய்கறி கடைக்காரர்.

 

அவருடைய கேள்வி, மாநகராட்சி ஆணையரின் செவிகளில் விழுந்தால் நல்லது.

 

 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.