
தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே வாரியம் சரண்டர் செய்ததாக செய்தி வெளியாகியிருந்தது. அதாவது தமிழகத்திற்கான ரயில்வே திட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 727 கோடி பயன்படுத்தாமல் தெற்கு ரயில்வே அதிருப்பி அனுப்பியதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சரண்டர் செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டின் மாறும் தன்மையை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
ரயில்வே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அந்த திட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்றார் போல பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்படும். அதன்படி ஒரு காலாண்டில் குறிப்பிட்ட திட்டத்திற்கு நிதியை ஒதுக்கிவிட்டு அதை பயன்படுத்த முடியாமல் இருந்தால், மீதமுள்ள நிதியை உடனடியாக கூடுதல் நிதி தேவைப்படும் மற்ற திட்டங்களுக்கு மாற்றப்படும். எனவே நிதியை அடுத்த காலாண்டிற்குள் மாற்றுவது ஒரு வழக்கமான பரிமாற்றமே நடந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் எந்த விதமான நிதி பற்றாக்குறையும் இல்லை. தேவைக்கு ஏற்ப திட்டங்களுக்கான போதுமான நிதி ஆதரவும் தொடர்ந்து கிடைக்கிறது. நிதியை சரண்டர் செய்வது என்பது தேசிய அளவிலேயே உள்ள நடைமுறைதான்.
திண்டுவனம், செஞ்சி, திருவண்ணாமலை, அத்திப்பட்டு, புதூர், ஈரோடு, பழனி, சென்னை, புதுச்சேரி, கடலூர், காட்பாடி, விழுப்புரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 600 கோடி சரண்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசினுடைய உதவியோடு நடைபெறுகின்றன. ஒப்பந்ததாரர் தேர்வுக்கான டெண்டர் செயல்முறைகளும் நிறைவு செய்த பின்னர் இந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.