Skip to main content

ராஜேஷுக்கு என்னாச்சு? - விரிவாக விளக்கிய மகன்

Published on 29/05/2025 | Edited on 29/05/2025
rajesh son deepak about his father passed away

திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். 

இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இந்த சூழலில் ராஜேஷின் மகன் தீபக் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, “அப்பா இத்தனை பேரிடம் புகழையும் மரியாதையும் சம்பாதித்து இருக்கிறார் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்கு வரும் எல்லாரிடமும் நானும் அப்பாவும் தனிப்பட்ட முறையில் பழகியிருக்கோம். அவர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அப்பா குறித்து என்னிடம் தனியே அழைத்து பெருமையாக சொல்வார்கள். இத்தனை பேரின் அன்பை சம்பாதிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு மகனாக என் அப்பாவை நினைத்து பெருமைக் கொள்கிறேன். அவர் சம்பாதித்ததில் நான் பாதியாச்சும் சம்பாதித்தால் தான் அப்பாவின் ஆன்மா சாந்தியடையும்” என்றார். 

தொடர்ந்து இறப்பதற்கு முன்பு ராஜேஷின் உடல் நிலை குறித்து பேசிய அவர், “கடந்த வாரம் வரை அவர் நன்றாகத்தான் இருந்தார். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை கூட சரியாக எடுத்துக் கொண்டார். இரண்டு நாள் முன்னாடி துபாய் சென்றார். அங்கு என்ன சாப்பிட்டார் என தெரியவில்லை. நானும் அவர் கூட போகமுடியவில்லை. துபாய் நாட்டின் க்ளைமெட் அவருக்கு ஒத்துப்போகாது. அங்கு இருக்கும் தண்ணீர் குடித்தால் அவருக்கு நுரையீரலில் சலி பிடிக்கும். அந்த சலியோடு தான் இங்கு வந்தார். வந்தவுடனே என்னுடைய கல்யாண வேலையை ஆரம்பிச்சோம். நேற்று வரை கூட அந்த சலி இருந்தது. அதற்கான மாத்திரையை நான் கொடுத்தேன். பின்பு நன்றாக இருந்தார்.

இன்று காலையில்தான் ஒரு 6 மணி அளவில் என்னை எழுப்பி, கொஞ்சம் சலி மோசமாக இருப்பதாக சொன்னார். மருத்துவமனைக்கும் போகக்கூடாதென சொன்னார். நான் விடாப்பிடியாக ஆம்புலன்ஸுக்கு போன் பன்னேன். அவரை மேலே இருந்து கீழே தூக்கி வருவதற்குள் ஆக்ஸிஜன் லெவல் கம்மியாகிவிட்டது. ஸ்டெரெச்சரில் வைத்த போது கூட அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. அப்போது கூட என் கையை பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார். கடவுள் எப்படி அவருக்கு தெளிவு படுத்தினார் என தெரியவில்லை. ஆம்புலன்ஸில் ஏற்றி அந்த பெட்டில் படுக்க வைத்த போது என் கையிலே அவர் உயிர் பிரிந்து விட்டது. அப்போதும் எனக்கு மனசு ஆறவில்லை. எனக்கு தெரிந்து விட்டது அப்பா இறந்துவிட்டார் என்று. ஆனால் ஹாஸ்பிட்டல் போன பிறகு டாக்டர்கள் உறுதிபடுத்திவிட்டார்கள்” என்றார்.

அவரிடம் அவர் நடித்த படத்தை ராஜேஷ் பார்த்தாரா எனக் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “என் படத்தை பார்த்தார். அவருக்கு மட்டும் ஒரு ஷோ போட்டோம். ரொம்ப நல்லா பண்ணியிருக்க... புது முகம் மாதிரியே தெரியல... நல்லா வருவ என்று சொன்னார். இதை அவரது நண்பர்களிடத்திலும் சொந்தக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவார். எனக்கு ஒரு ஆறுதல் என்னெவென்றால் என் கல்யானத்தை பார்க்காத அப்பா, குறைந்தபட்சம் என் திறமையைப் பார்த்துவிட்டு சென்றார்” என்றார்.  

சார்ந்த செய்திகள்