
மாமன் படத்தை தொடர்ந்து சூரி அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படத்தில் நடிக்கிறார். இதை தவிர்த்து ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கைவசம் வைத்துள்ளார். பின்பு மீண்டும் மாமன் பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் பேச்சுவார்த்தை அளவில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூரி கதையின் நாயகனாக நடித்த கருடன் படம் வெளியாகி இன்றுடன் ஒராண்டு ஆகிறது. வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், முக்கிய கதாபாத்திரங்களில் ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்திருந்தனர்.
இப்படம் ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு சூரி தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கருடன்... அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.