
2013ஆம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இப்படத்திற்கு முன்பு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனோடு இணைந்து கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார். இதனிடையே நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் பொல்லாதவன், கொடிவீரன் ஆகியவை ஆகும்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதையடுத்து சூரியை வைத்து ஒரு படம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அவர் கடந்த 2ஆம் தேதி காலமானார். மாரடைப்பு காரணம் சொல்லப்பட்டது. மதுரையில் கடந்த 1ஆம் தேதி, ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. இவரது மறைவு, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சாந்தனு உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் விக்ரம் சுகுமாரன் குடும்பத்தினருக்கு அவர் கடைசியாக இயக்கிய இராவண கோட்டம் படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, தற்போது 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். அதற்கான காசோலையை கண்ணன் ரவியின் மகன் தீபக், விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம் வழங்கினார். அப்போது சாந்தனு, தயாரிப்பாளர் டி.சிவா, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர்.