Skip to main content

" ஒரு படம் பூஜ போடுற அன்னக்கே சாவம் குடுக்குற ஆளுகளுக்கு மத்தியில.." - இம்சை அரசன் டாக்ஸ்#7

Published on 22/10/2019 | Edited on 23/10/2019

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருபவர் வடிவேலு. அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகள் ஏராளம். அவரின் சிரிப்பு மருந்தில் தன்னுடைய கஷ்டங்களை சில நிமிடங்களாவது மறந்தவர்கள் பலகோடி. அத்தகைய சிரிப்பு ராஜாவின் திரையுலக பயணத்தை நம்முடைய இதழில் அவர் தொடராக எழுதி வந்தார். அதில் ஒரு பகுதி வருமாறு,

 

vb



இம்புட்டு உழைப்பும் எதுக்கு? என்னய வாழவைக்கிற ஒங்கள சிரிக்க வைக்கத்தான். மக்கள்ட்ட இருந்து அம்புட்டு விஷயங்கள கிரகிச்சு வச்சிருக்கேன். இல்லேன்னா என்னால ஒருவருஷம் கூட சினிமாவுல காலந்தள்ளீருக்க முடியாது. டூரிங் டாக்கிசுல தரட்டிக்கட்ட எடுத்துக்கிட்டு முன்ன இருக்கவன் தல மறக்கிதுன்னு மணல குமுச்சு அதுல ஒக்காந்து "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்'னு சரோஜாதேவியம்மா வர்றத ரசிச்சவன் நான். பெஞ்சு டிக்கட்டுல மூட்டப்பூச்சி கடிய வாங்கிக்கிட்டே அந்தம்மா நடிச்ச எம்புட்டோ படங்கள பாத்திருக்கேன். "ஆதவன்' படத்துல கிட்டத்தட்ட நாப்பது நாளு அந்தம்மா கூட ஷூட்டிங்ல இருந்தேன். "தலைவர் எம்.ஜி.ஆர்.கூட ஒரு படத்துல நடிச்சிருந்தா எப்புடி இருக்கும்?'னு எனக்கு ரொம்பநா ஏக்கம். சரோஜாதேவியம்மா கூட நடிச்சப்ப... தலைவர் கூட நடிச்ச மாதிரியே அம்புட்டு சந்தோஷமா இருந்துச்சு.
 

gh



என்னய பாக்க வர்றவுங்க சில பேரு ‘"நாம வடிவேலு கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கது நெசந்தானா?'னு கைய கிள்ளிப் பாத்துக்குவாங்களாம். நான் சரோஜாதேவியம்மா கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கும்போது இப்புடிதேன் கைய கிள்ளிப் பாத்துக்கிட்டேன். "தரயில ஒக்காந்து பாத்த அந்த அம்மாகூட தெரயில ஒண்ணா நடிக்கிறமே'னு ஆச்சர்யமா இருந்துச்சு. "உன்னை ஒன்று கேட்பேன்... உண்மை சொல்ல வேண்டும்' என அந்த அம்மாவப் பாத்து நான் பாட... ‘"ஹேய்'னு அந்தம்மா கன்னத்துல கை வச்சு ரசிச்சாங்க. ‘"வேலு எங்க? வேலுவ கூப்பிடுங்க'னு அந்தம்மா எம்மேல ரொம்ப பிரியமா இருந்தாங்க. "என்னாங்க இது, ஒங்க மேல அந்தம்மா இம்புட்டு பாசமா இருக்காங்க?'னு உதயநிதியும், கே.எஸ்.ரவிக்குமாரும் கூட கேட்டாங்க. எம்.ஜி.ஆர். ஆக்ஷன்ல ‘"ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை'னு நான் பாடினப்போ "பாடு வேலு.. பாடு பாடு'னு கேட்டு ரசிச்சாங்க. "எப்புடிம்மா இம்புட்டு இளமயா இப்பவும் இருக்கீங்க?'னு கேட்டேன்.

 

vh



"பழய படங்கள போட்டுப் பாத்து ரசிப்பேன். அதிகமா காமெடி படங்கள் பாப்பேன். அதப்பாத்து மனசுவிட்டு சிரிப்பேன். நான் அனுமார் பக்தை. அவரோட ஆசியும் இருக்கு'னு சொன்னாங்க. அவரோட ஆரோக்கியத்துக்கும், உற்சாகத்துக்கும் நான் கண்டுபிடிச்ச காரணம் என்னன்னா... அவரோட நல்ல மனசு. "வேலு... இந்தப்படம் ரொம்ப நல்லா ஓடணும் வேலு. நான் ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்க வந்திருக்கேன். அதனால இந்தப்படம் நல்லா ஓடணும்னு கடவுள வேண்டிக் கிட்டிருக்கேன்'னு சொன்னாங்க. அந்த மகராசி வேண்டுனது மாதிரியே... "ஆதவன்' படம் நல்லா ஓடிச்சு. ‘"இந்தப்படம் ஓடாது, இவன் தேற மாட்டான்'னு ஒரு படம் பூஜ போடுற அன்னக்கே சாவம் குடுக்குற ஆளுகளுக்கு மத்தியில அந்தம்மாவோட நல்ல மனச பாத்தீங்களா? அந்த நல்ல மனசுதான் அந்தம்மாவ இன்னமும் ஆரோக்யமா வச்சிருக்கு'ங்கிறது என்னோட யூகம்.


 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.