Skip to main content

பழி வாங்கிய சைக்கோ மாப்பிள்ளை; பெண் எடுத்த துணிச்சல் முடிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 14

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

 Advocate Santhakumari's Valakku En - 14

 

ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு, சைக்கோ கணவர்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்கள் நம் நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு வழக்கு குறித்து நம்மிடம் விவரிக்கிறார் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்கள்.

 

பவித்ரா என்கிற பெண். மிக அழகானவள். திருமணம் நிச்சயமான தகவலை அவளுடைய பெற்றோர் அவளிடம் கூறினர். அவள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மாப்பிள்ளையைக் கல்யாண நாள் வரை பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு வாய்க்கவில்லை. மாப்பிள்ளை அழகில் குறைவாக இருந்தார். ஆனால் இவளால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. திருமணத்தன்று மாப்பிள்ளையுடன் வந்த அவரின் சகோதரரைப் பார்த்து அவளுடைய தந்தை "என்னப்பா நீயே மாப்பிள்ளை மாதிரி வருகிறாய்" என்றார். 

 

தமாஷாக சொன்ன இந்த விஷயம் மாப்பிள்ளையை உறுத்தியது. திருமணம் முடிந்தது. முதலிரவில் அவன் கடுகடுவென்று இருந்தான். அவனுடைய காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய அவள் முயன்றபோது "உங்கப்பன் தான் சொன்னானே என் தம்பி தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறான் என்று. அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு" என்றான். அவளுக்கு அதிர்ச்சியானது. முதலிரவு நடக்கவில்லை. அடுத்த நாள் தன்னுடைய பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறினாள்.

 

அடுத்த நாள் அவளுடைய தந்தை மாப்பிள்ளையிடம் சென்று தன்னுடைய தமாஷான வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகும் அவன் மாறவில்லை. அவள் அழகாக இருக்கிறாள் என்று அனைவரும் சொல்லச் சொல்ல இவனுக்கு அவள் மேல் ஒரு தீராத பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் தன் தம்பியோடு அவளை சேர்த்து வைத்து சந்தேகப்படுவது போல் பேசினான். இவளால் தாங்கவே முடியவில்லை.

 

அவனுடைய தாய் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவன் திருந்தவில்லை. ஒருநாள் அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். இனி அங்கு தன்னால் வாழ முடியாது என்றாள். அவளுடைய தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் இவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு வரவில்லை. இந்த நேரத்தில் அவள் கர்ப்பமாகிறாள். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்பது தெரிந்தது. இதனால் சற்று முன்பாகவே பெற்றோர் வீட்டுக்கு அவள் வர வேண்டியிருந்தது.

 

அதன் பிறகு அவள் கணவன் வீட்டுக்குத் திரும்பச் செல்லவேயில்லை. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவன் வந்து பார்த்துவிட்டுச் சென்றான். ஆனால் இவளை அழைத்துச் செல்லவில்லை. இவளும் இனி அங்கு செல்லும் எண்ணமில்லை என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பெற்றோர் வீட்டிலேயே இருந்து அவள் எம்.பி.ஏ படித்தாள். நாங்கள் அவளுக்கு விவாகரத்து வேண்டி வழக்கு தொடுத்தோம். விவாகரத்து கிடைத்தது. அவனிடமிருந்து நிரந்தர ஜீவனாம்சமும் பெற்றோம். அந்தத் தொகை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. இன்று அந்த இரண்டு பெண்களும் வளர்ந்து, சுயமரியாதையோடு வாழ்கின்றனர். அத்தனை பெருமைகளும் பவித்ராவையே சேரும்.

 

 

Next Story

தவறி விழுந்த மனைவி; தற்கொலை முயற்சியாக மாற்றிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 52

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
advocate-santhakumaris-valakku-en-52

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சுசித்ரா என்ற வடநாட்டு பெண்ணின் வழக்கு இது. திருமணம் செய்து கொள்ளும் அந்த பையன் மிகவும் ஜாலியான டைப், எப்போதுமே கலகலப்பான ஆள். சுசித்ராவோ கொஞ்சம் தேவைக்கு மட்டும் பேசும் அமைதியான குணம். திருமணமானவுடன் தன் மனைவி தன்னைப் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவள் அப்படி மாறவில்லை. அது அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அந்த பெண்ணை ஏதாவது குறை சொல்லி காயப்படுத்தி வந்திருக்கிறார். போதாக் குறைக்கு கூட இருந்தவர்களும், பார்ப்பவர்களும் என்ன இந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறீர்கள், குள்ளமாக இருக்கிறதே என்று ஏற்றி வேறு விடுகிறார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் என்றாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியும் தனக்கேற்ற மனைவி அமையவில்லையே என்று இவரிடம் நீங்கா குறை இருந்து வருகிறது. 

ஒருநாள் மாடி பால்கனியில் அந்த பெண் தனியாக உட்கார்ந்திருக்கும்போது தனது வளையல் தவறி கீழே விழ, பதறிப் போய் எடுக்கப்போன போது அங்கிருந்து விழுந்து பலமான அடிப்பட்டுவிட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, போலீசில் புகாரளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படியே அவள் கணவனும் தவறி விழுந்து விட்டதாக எழுதி கொடுக்க, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, இல்லை யாரும் தள்ளிவிடவில்லை இது தெரியாமல் நடந்த விபத்து தான் என்று நடந்ததை சொல்லி விடுகிறாள். முதுகுத் தண்டு, இடுப்பெலும்பு என்று அடிப்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் தான் இருக்க முடியும் என்று ஆகிவிடுகிறது. கணவனுக்கு மருத்துவமனை செலவு என்று ஆகியதில் ஏற்கனவே இருந்த வெறுப்பு அதிகமாகி மேலும் ஒரு அலட்சியம் வந்துவிடுகிறது. தனியாக விட்டு விடுகிறார். மருத்துவமனையில் கூட ஒரு ஹெல்ப் வைத்துக்கொள்ளுமாறு சொல்லியும் தொடர்ந்து வைக்கவில்லை. இந்த பெண்ணோ பாத்ரூம் கூட போக முடியாமல் சிரமப்பட்டு கணவனிடம், தான் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருந்து வருகிறேன் என்று கேட்க, இதற்காக காத்துக் கிடந்தவர் போல அனுப்பி விடுகிறார். 

மீண்டும் பத்து நாள் கழித்து வந்தபோது, அவளது மாமியார் உள்ளே விடவே இல்லை. உன் கணவன் இருக்கும் நேரம் கேட்டு அவர் இருக்கும் போது வா. இப்போது போய் விடு என்று அனுப்பி விடுகிறார். இவளுக்கு அப்போதுதான் ஏதோ தவறாக இருப்பதாக நினைக்கிறாள். அவரிடமும் பதில் இல்லை. மூன்று மாதம் கழித்து வந்தபோதும் அவர், நீ அன்று செய்தது தற்கொலை முயற்சி. இதுபோன்று மேலும் மேலும் நீ செய்தால் என்னால் உன் கூட வாழ முடியாது. எனவே நீ உன் அம்மா வீட்டிற்கே சென்று விடு என அனுப்பி விடுகிறார். இவள் போன பின்பு அவர் குடும்ப நீதிமன்றத்தில், அவள் என்னை கொடுமைப் படுத்துகிறாள். அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள். என் குடும்ப வாழ்க்கையே போயிற்று எனவே டிவோர்ஸ் வேண்டும் என்று பொய் வழக்கு போட்டு விடுகிறார்.

இவர்களும் ஒரு வக்கீல் வைத்து வழக்கை நடத்தி பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வக்கீலுக்கு பணம் செலுத்த முடியவில்லை. அவள் நீதிமன்றம் வரும் போதெல்லாம், அவளை நோகடித்து அவர் பேசுகிறார். குழந்தைகளையும் பார்க்க அனுமதிப்பதில்லை. அவளுடைய வக்கீலையும் காசு கொடுத்து வாங்கி விட்டதாக சொல்லி விடுகிறார். இப்படி வேறு வழி இல்லாமல் அந்த பெண் இருந்தபோது தான், ஒருவருடைய சிபாரிசு மூலம் எனக்கு இந்த வழக்கு வருகிறது. அந்த பெண்ணின் பரிதாப நிலைக்கு ஏற்ப அவளுக்காக கோர்ட்டில் வழக்கை மேற்கொண்டு நாங்கள் நடத்தினோம். முதல் கேள்வியாக, அந்த நபரிடம் இந்த பெண் தற்கொலை முயற்சி செய்தாள் என்ற குற்றச்சாட்டு வைத்ததால், எங்கு நீங்கள் பார்த்தீர்கள்? எப்படி செய்தாள்? என்ன மாதிரி முயற்சி செய்தாள் என்றெல்லாம் கேட்கிறோம், அவரிடம் ஒன்று கூட சரியான பதில் இல்லை. எனக்கு தெரியாது என்றே தான் பதில் வருகிறது. அதுபோக அவள் அடிப்பட்ட போது அவள் கணவன் தான் போலீசில் புகார் அளித்திருந்தார். அதிலும் கூட தற்கொலை என்று குறிப்பிடவே இல்லை. விழுந்து விட்டதாகத்தான் குறிப்பிட்டிருந்தார். அதை கோர்ட்டில் கூட தாக்கல் செய்யவில்லை. அதை வைத்து நாங்கள் பேசினோம்.

இது ஒரு மெடிக்கல் லீகல் கேஸ் என்பதால், கண்டிப்பாக மருத்துவமனையில் மனைவியிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டிருக்குமே என்று பார்த்தால், அதிலும் மனைவி போலீஸ் கம்பளைண்ட்டில் தெளிவாக, வளையல் விழப் போய்த்தான் விழுந்து விட்டதாக தெளிவாகச் சொல்லி இருக்கிறாள். எனவே அதற்கும் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக இரண்டாவது வக்கீலாக நான் அவள் வழக்கை எடுப்பதால், மீண்டும் ஒருமுறை அவளுக்கு ஒரு அசிஸ்டன்ட் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை விசாரிக்க வேண்டி வந்தது. ஆனால் அந்த கணவர் முதல் முறை வேறொரு அசிஸ்டன்ட் பேர் சொல்கிறார், இப்போது வேறொரு பெயர் சொல்கிறார். அந்த அசிஸ்டண்டையும் அவர்கள் வந்து காட்டவில்லை. ஒன்றிலும் உண்மை இல்லை. இதுபோக தன் பிள்ளைகளையும் அம்மாவிடம் அனுப்பாமல், கோர்ட்டில் அவளுக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார். 

இதற்கிடையில் அந்த பெண்ணிடம் எதிர் வக்கீல், கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டாயா என்று கேட்டு அதை வாங்கிப் படிக்கச் சொன்னார். ஆனால் எத்தனை முறை படித்தாலும் அதில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை. அவளும் தான் எழுதியதாகச் சொல்லி அழுகிறாள். ஆனால் அது எடுபடவில்லை. அங்கேயே அப்போதே நிறுத்திவிட்டு நான் நீதிபதியிடம் அவரிடம் இருக்கும் ஒரிஜினல் மனுவை படிக்குமாறு மெமோ போட்டேன். அடுத்த செஷன் வரும்போது வக்கீல் மீண்டும் அதையே கேட்டபோது, நான் நீதிபதியிடம் இருக்கும் ஒரிஜினலை கேட்டு படிக்குமாறு சொல்ல அவரும் படிக்க அதில் அந்த வார்த்தை இருந்தது. மேலும் தனக்கு ஒரு பைசா கூட காசு வேண்டாம், எனக்கு என் கணவருடன் வாழ வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறாள்.

ஆனால் இவரோ பணம் பறிக்கத்தான் இப்படி செய்கிறாள். ஐந்து வருடமாக எத்தனை செலவு செய்கிறோம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் என்னிடம் நிறைய ஆட்களை பலமுறை அனுப்பி, பணம் கொடுத்து செட்டில் பண்ணி டிவோர்ஸ் வாங்க சொல்லுங்கள் என்றும் அனுப்புகிறார். ஒரு வக்கீலாக நான் என்னுடைய கிளைன்ட்டிடம் காசு செட்டில் பண்ணி டிவோர்ஸ் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். அந்த பெண்ணிடம் உனக்கு விருப்பம் இருந்தால் செய் என்று விட்டுவிட்டேன். அந்த பெண் மீது தவறில்லை என்றாலும், தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை பாதிப்பதால், அந்த நபர் இப்படி டிவோர்ஸ் வேண்டும் என்று இப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்தது. ஆனால் இந்த பெண் பணம் வாங்க ஒத்துக்கொள்ளவே இல்லை. கடைசியாக வழக்கு மேல் வாதம் என்று போக ஒரு வழியாக தீர்ப்பு வந்தது. ஆனால், அந்த நபருக்கு டிவோர்ஸ் கொடுத்து விடவேண்டும் என்று தான் தீர்ப்பு வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் போட்டுக் காத்திருக்க, பெண் பக்கம் எந்தவித தவறும் இல்லை. தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள் என்று தான் இவர் காரணம் காட்டி டிவோர்ஸ் கேஸ் போட்டிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு விஷயம் எதுவுமே நடக்கவில்லை. அவரிடமும் அதற்கான ஆதாரம் இல்லை என்றும் அந்த பெண் தன் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறாள் எனவே, அவர் தன் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு மாறி வந்தது. ஆனால் என்னதான் ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு வந்தாலும், அவர்கள் இப்போது சேர்ந்து வாழவில்லை. அவர் தன் குழந்தைகளை எந்த குறையும் இல்லாமல் நன்றாக படிக்க வைத்து லண்டன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இருவரும் தனித்து தான் வாழ்கிறார்கள்.

Next Story

தாம்பத்திய உறவுக்கு மறுப்பு; மனைவியின் உறவில் கணவனுக்கு ஏற்பட்ட வியப்பு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 51 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
advocate-santhakumaris-valakku-en-51 

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வசந்த் என்பவரின் வழக்கு இது. பி.இ. படித்து முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து போகப் போகிறார். பெண் பார்க்கிறார்கள். இரு வீட்டாருக்கும் பிடித்துப் போகிறது. பெண்ணும் இவருடன் சிரித்துப் பேசி ஒத்துக்கொள்கிறாள். பையன் வீட்டில், பெண் வீட்டாரிடம் எத்தனை பவுன் நகை போடுவீர்கள் என்று எந்த வித டிமாண்டும் செய்யவில்லை. அதிலும் மாறாக நாங்கள் இருபத்தி இரண்டு பவுன் நகை போடுகிறோம் என்று, மகள் போல பார்த்து பார்த்து திருமணம் செய்து அழைத்து போகிறார்கள். பெண் வீட்டிலும் மாப்பிள்ளை பேரில் பத்து பவுன் போடுகிறார்கள். ஆனால் எனக்கு எதுக்கு நகை என்று திருமணம் பின்பு அதை மனைவியிடமே கொடுத்து விடுகிறார். இப்படி திருமணம் ஆன கொஞ்ச நாட்கள் நன்றாக செல்கிறது. ஆனால் பெண் மட்டும் நாட்கள் செல்ல செல்ல விலகிப் போவதை கவனிக்கிறார். 

முதலிரவில் தனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி இருக்கிறாள். ஏன் சரியாக பேசுவதில்லை என்று கேட்பதற்கும், பேசிக்கொண்டு தானே இருக்கிறேன் என்று வெடுக்கென்று தான் பதில் வருகிறது. சரி ஏன் விலகிப் போகிறாய் என்று கேட்டதற்கு, நீங்கள் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டீர்கள் என்றாள். விருப்பமிருக்கா என்று  கேட்டபோதே சொல்லி இருக்கலாமே என்று கேட்டதற்கு, இல்லை எனக்கு வெளிநாடு போக வேண்டும் என்று தான் ஆசை. திருமணம் செய்துகொண்டு வெளிநாடு போ என்ற என் பெற்றோரின் கட்டாயத்தினால் தான் ஒத்துக் கொண்டேன் என்று அதிர்ச்சி அளிக்கிறாள். நம் சமூக முறைப்படி வாழ வேண்டும். போகப் போக சரியாக மாறி விடுவாள் பார்ப்போம் என்று இவரும் அதை அப்போதே விட்டு விடுகிறார். எப்போது ஆஸ்திரேலியா போகிறோம் என்று கேட்கிறாள். விசாவிற்கு  அப்ளை செய்திருப்பதால் பத்து மாதமாவது ஆகும். நான் அங்கு சென்று விசா உனக்கும் வந்ததும் அழைத்து போவதாகச் சொல்கிறார்.   

என்னால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது. எனக்கு ஆஸ்திரேலியா சுற்றி பார்க்க வேண்டும் என்கிறாள். பையனும் சந்தோஷமாக டூரிஸ்ட் விசா மூலம் அழைத்துச் செல்கிறார். அங்கே நன்றாக சுற்றிப் பார்ப்பது எல்லாமே செய்கிறாள். ஆனால் அவருடன் அருகில் வந்து நிற்பது கூட இல்லை. இப்படியே போகிறது. அவளுக்கு நிரந்தர விசாவிற்கு கிட்டத்தட்ட நான்கரை லட்சம் செலவு செய்து வாங்குகிறார். பின்னர் ஹனிமூனிற்கு  சீனாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கேயும் நெருங்க விடுவதில்லை. இதற்கிடையில் அவள் தன் பெற்றோருடன் சிங்கப்பூர் செல்கிறாள். இடைப்பட்ட காலத்தில் மனம் மாறி இருப்பாளோ என்று அங்கு போய் பேசி பார்க்கிறார். ஆனால் ஒன்றும் மாறவில்லை. அடுத்து  விசா கிடைத்து விடுகிறது. இவளும் போட்டிருந்த முப்பத்தி இரண்டு பவுன் நகையை அம்மா வீட்டில் வைத்து விட்டு நிரந்தரமாக ஆஸ்திரேலியா வந்து விடுகிறாள்.

அங்கு வந்து வாழும் போதும் அவள் போக்கு தொடரவே, எவ்வளவோ எடுத்து சொல்கிறார். நமக்கு குழந்தைகள் என்று ஆகிவிட்டால் ஒன்றும் தெரியாது. எனக்கு உன் மேல் எந்த வித வருத்தமும் இல்லை. கணவன் மனைவி என்று நாம் சேர்வது நடந்து விட்டது இனிமேல் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று பேசிப் பார்க்கிறார். ஆனால் அந்த பெண் எதற்கும் சரி வரவில்லை. போதாதற்கு அவரை அவருடைய கசின்களோடு கம்பேர் வேறு செய்கிறாள். அவர்களை பார். நீ எவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய் என்று. அவருக்கு ரொம்ப வருத்தம். தான் ஒரு அத்லெட் என்றும், இதில் தவறில்லை என்றும், எப்படி கணவனை வேறொருடன் நீ ஒப்பிட்டு பார்க்கிறாய் என்று கேட்கிறார். உனக்கு அப்படி என்னை பிடிக்கவில்லை என்றால், திருமணம் முன்பே நிராகரித்து இருக்கலாமே என்று கேட்க, உன்னிடம் யார் பேசுவார்கள் என்று வெடுக்கென்று அதோடு நிறுத்தி விடுகிறாள்.

தனக்கு ஒரு க்ளோஸ் பிரெண்ட் இருக்கிறாள். பெயர் மல்லி. என் கூட ஒரு மாதம் தங்குவாள் என்றும் அவள் ஐரோப்பாவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள். இதனை தன் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லி விடுகிறாள். சரி என்று இவரும் ஒத்துக்கொள்ள, அந்த பெண் வந்ததும் தான் தெரிகிறது, அவர்களின் பழகும் விதமே நட்பு தாண்டி இருக்கிறது. ஒரு கணவன், மனைவி போல நடந்து கொள்கிறார்கள். என்னவென்று இவர் கேட்ட பின்தான் சொல்கிறாள், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ அங்கே சென்னையில் முடியவில்லை எனவே தான் மல்லி என்பவள் முதலில் ஐரோப்பாவிற்கு சென்றாள். நான் வேறு வழி இன்றி திருமணம் செய்து இங்கே வந்திருக்கிறேன் என்கிறாள். உடைந்து போகிறார் இவர். ஒரு மாதம் இங்கே சென்னையில் அந்த பெண் வந்திருக்கும் சமயம், அந்த பையன் இங்கே வந்து என்னிடம் விவரங்களை சொல்லி விவாகரத்து வழக்கு போடுகிறார். அவளும் வந்தவள் மீண்டும் எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை. அவர் ஆஸ்திரேலியா சென்றவுடன், அங்கு அவருக்கு நோட்டீஸ் வருகிறது. 

இவருக்கு மனநலம் சரி இல்லை. இவருடன் கூட சேர்ந்து வாழ முடியாது என்று பொய் வழக்கு போட்டிருக்கிறாள். மனமுடைந்து போனவர் இதற்கு பதில் அளித்தே தீர வேண்டும் என்று என்னிடம் வந்து பேச, வேலையை விட்டுவிட்டு மிகவும் அலைந்து ஒரு வருடத்திற்கும் மேல் இங்கேயே இருக்கிறார். ஆனால் அந்த பெண் இங்கு வரவே இல்லை. எத்தனையோ வக்கீல் மாறினாலும், காலங்கள் ஆகியும் அவள் இங்கே அப்பியர் ஆகவில்லை. நீதிபதியே இந்த பையனின் அலைச்சலை பார்த்து கருணைப்பட்டு ஒருதலைப்பட்சமாக அவள் போட்ட வழக்கை நிராகரித்து  தள்ளுபடி செய்து விடுகிறார். அடுத்து அவள் மேல் புகார் வைத்து நாங்கள் வழக்கை போட்டோம். ஆனால் அவளிருக்கும் இடத்திற்கு நோட்டீஸ் போட்டால் வரவில்லை. வேலை பார்க்கும் இடத்திற்கு நோட்டீஸ் அனுப்பினாலும் பதில் இல்லை. 

இரண்டு வருடம் போராடி இதற்கு மேல் முடியாது என்று வந்தவுடன் அயலக அமைச்சகத்திற்கு கடுதாசி போட்டு, கோர்ட் நோட்டீஸ் கொடுத்திருப்பதை சொல்லி கண்டுபிடித்து தருமாறு கேட்டு அனுப்பினோம். அவர்களின் மூலமாக ஆஸ்திரேலியா எம்பசி மூலம் அழைப்பு விடுத்தாலும், போன் காலை நிராகரித்து விடுகிறாள். அவளின் நண்பர்களை வைத்து பாலோ செய்து, அவள் போகுமிடம் அறிந்து இறுதியாக அவளை இங்கு வரவழைக்க மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு வந்ததும் நீதிபதி கேட்கிறார், இவருடன் வாழ விருப்பமா இல்லையா என்று கேட்ட பின், நீதிபதியுடன் தனியாக பேசவேண்டும் என்று கேட்டு அவரிடம், உண்மையை ஒத்துக்கொண்டாள். தான் தப்பான அறிவுரையின் பேரில் அவர் மீது பொய்யாக அவர் மெண்டல் என்று கேஸ் போட்டுவிட்டேன். அவர் நல்ல மனிதர் தான் என்று சொல்லி விடுகிறாள். கடைசியாக மியூச்சுவல் கன்செண்ட்டில் டிவோர்ஸ் ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் வசந்த் தரப்பில் போடப்பட்ட இருபத்தி இரண்டு பவுன் திருப்ப கேட்டதற்கு மறுபடியும் பதில் அளிக்காமல் ஒரு வாரம் ஆஜர் ஆகவில்லை. நகையும் திருப்பிக் கொடுக்கவில்லை. 

அந்த பையனை திரும்பியும் ஆஸ்திரேலியாவிலிருந்து வர சொல்ல முடியாது என்பதால், நீதிபதியின் அனுமதியுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி, ஒருதலைப்பட்சமாக வசந்த் என்ற அந்த பையனுக்கு இறுதியாக டைவோர்ஸ் வழங்கப்பட்டது. அந்த பெண்ணும் மல்லியும் சேர்ந்து இங்கே வாழ முடியாது என்பதால், இந்த பையனை வைத்து இப்படி செய்து இருக்கிறார்கள். அவர்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அவர்களின் உறவை நாம் தவறாகவோ விமர்சிக்கவோ நமக்கு உரிமை இல்லை தான். ஆனால் அவர்கள் வாழ இன்னொரு அப்பாவி மனிதரை பயன்படுத்தி அவருடைய வாழ்க்கையை வீணாக்க கூடாது.