Skip to main content

உலகக்கோப்பைக்கு முன் ஓய்வை அறிவிக்கும் இந்திய வீரர்கள்?

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் அடுத்தடுத்த தொடர்கள் மூலம் தங்களின் பலத்தைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் இங்கிலாந்து டூர் என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
 

இன்னொருபுறம், இந்திய அணியில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான வீரர்கள் சிலர், உலகக்கோப்பைக்கு முன்பாகவே தங்கள் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கணித்துள்ளனர். உலகக்கோப்பைக்கு முன்னதாக தங்கள் ஓய்வை அறிவிக்கலாம் என  எதிர்பார்க்கப்படும்,‘இவங்க இருந்திருந்தால் மேட்ச் லெவலே வேற’ என சொல்லவைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்... 
 

 

 

அமித் மிஷ்ரா
 

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடக் கூடிய அமித் மிஷ்ராவால் சர்வதேச போட்டிகளில் ஏனோ ஜொலிக்கவேயில்லை. இந்தியாவுக்காக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், 64 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 4.73 ரன்கள் என்ற சிறந்த எக்கானமியும் கொண்டிருந்தாலும் யஸ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் ஆதிக்கம் இவருக்கான வாய்ப்பை பொய்யாக்கிவிட்டன. 2000ஆம் ஆண்டிலேயே களத்திற்கு வந்தபோதும் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜனால் லைம்லைட்டுக்கு வரமுடியாமலே போன இவருக்கு வயது 35.
 

இர்ஃபான் பதான்


 

irfan

 

 

 

தனது விளையாட்டுத் திறமையால் அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டவர். ஆனால், அடுத்தடுத்த காயங்கள் அவரை அப்படியே முடக்கிவிட்டன. பாகிஸ்தானுக்கு எதிராக 2006ல் ஹாட்-ட்ரிக், 2008ல் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவைப் பந்தாடியது, 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடி என இவரை நினைத்தாலே வரும் மலரும் நினைவுகள் ஏராளம் உண்டு. அப்படியிருந்தும் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடமல்போய், கடைசியாக நடந்த ஐ.பி.எல். சீசனில் ஏலத்தில் விற்பனையாகாமலும் போனார். 
 

கவுதம் கம்பீர்
 

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அத்தியாவசியமான 97 ரன்களை விளாசினாலும், யாராலும் பாராட்டப்படாமல் தனித்து விடப்பட்டவர். 2016ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு உள்கட்சி அரசியல் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஒருபுறம் ஐ.பி.எல். போட்டிகளில் பரபரப்பாக ஆடினாலும், இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பே அவருக்கு கிடைக்கவில்லை. கடைசியாக நடந்த ஐ.பி.எல். சீசனிலும் தனது பொறுப்பைக் குறைத்துக்கொண்டு, பெவிலியனில் அமைதியாக மட்டுமே அமர்ந்திருந்தார்.
 

 

 

ஹர்பஜன் சிங் 
 

அணில் கும்ப்ளே உடன் இணைந்து பல்வேறு தொடர்களில் இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தவர். 2007 டி20, 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் முக்கியப்பங்கு வகித்தவர் என்றாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் வருகைக்குப்பின் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். நடந்துமுடிந்த ஐ.பி.எல். சீசனிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை என்றாலும், ஹர்பஜன் என்றால் ஒரு தனி நம்பிக்கை இருக்கும். அவரது கடந்தகாலத்தை ஒப்பிடும்போது, இதுவே ஓய்வை அறிவிக்க சரியான நேரம் எனலாம்.
 

யுவ்ராஜ் சிங்
 

Yuvi

 

 

 

இந்திய அணியின் சொதப்பலான ஃபீல்டு செட்-அப்பை மாற்றியமைத்தவர்களில் முக்கியமானவர். ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், 2011 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் என்ற மகுடங்களே அவரது திறமையின் சாட்சி. ஆனால், புற்றுநோய் பாதிப்பில் இரண்டு முழு ஆண்டுகளைப் பறிகொடுத்து, அதன்பின்னரும் இந்திய அணியில் இடம்பிடித்து வாழ்க்கையையே போராட்டமாக மாற்றியவர். மீண்டுவந்த பிறகு அவரிடம் பரபரப்பு குறைந்து, பயம் தொற்றிக்கொண்டதாகவே வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். விண்டேஜ் யுவிக்காக ஒரு கூட்டம் இன்னமும் காத்திருப்பது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.  
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.