Skip to main content

பூம் பூம் பும்ராவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்...

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார் பும்ரா. மூன்றே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து இன்று உலகின் நம்பர் 1 பவுலராக வலம்வருகிறார். ஒரு முறை அல்ல; இரு முறை அல்ல; மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இக்கட்டான சூழ்நிலைகளில் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பவுலிங் மூலம் வெற்றியை தேடித் தந்தார். 

 

john wright man who introduced jasprit bumrah in ipl

 

 

1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது கபில்தேவ் பவுலிங் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்தார். அதற்கு பிறகு ஒரு இந்திய பவுலர் உலகக்கோப்பையின்போது பவுலிங் தரவரிசையில் டாப் 5 இடத்தில் இருப்பது இப்போதுதான். பும்ரா நம்பர் 1 பவுலராக உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்குகிறார்.

அகமதபாத்தில் பிறந்த பும்ரா தான் விளையாடும் முதல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் லீடிங் ஃபாஸ்ட் பவுலராக, இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தவுள்ளார். பும்ராவின்  முழு பெயர் ஜஸ்பிரிட் ஜஸ்பிர் சிங் பும்ரா. சிறு வயதில் இருந்தே படிப்பை விட கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பெற்றோர்களும் பும்ராவின் விருப்பம் போல நடந்து கொண்டனர். 

2013-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை காண சென்றிருந்தார், மும்பை இந்தியன்ஸ் அணியின் அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட். பவுன்சர்களாலும், பர்பெக்ட் லென்த்களாலும் எதிரணியை திணறடித்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். வித்தியாசமான பவுலிங் ஸ்டைல், பவுலிங் ஸ்கில் ஆகியவை முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரின் கவனத்தை பெற்றன. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார் பும்ரா. அதுதான் பும்ராவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. 

மிட்செல் ஜான்சன், வாசிம் அக்ரம் மற்றும் பிரெட் லீ ஆகியோர் பும்ராவின் பேவரட் பவுலர்கள். அவர்களது பவுலிங் வீடியோக்களை பார்த்து, அதிலிருந்து பவுலிங் ஸ்கில்களை கற்றுக் கொண்டுள்ளார் பும்ரா. ஜாஹீர் கான், மலிங்கா, ஷேன் பாண்ட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் மும்பை அணியில் இருந்தது பும்ராவை மேலும் மேம்படுத்த பெருமளவில் உதவியுள்ளது.

 

john wright man who introduced jasprit bumrah in ipl

 

 

1990-களில் யார்க்கர் பவுலிங் என்றால் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் தான் துல்லியமாக யார்க்கர் வீசி வந்தார். தற்போது அதேபோல துல்லியமாக யார்க்கர் வீசுவதில் தன்னை மேம்படுத்தி வருகிறார் பும்ரா. குறைந்த நாட்களிலேயே சிறப்பாக பவுலிங் செய்யும் திறமையை வளர்த்துக்கொண்டது ஆச்சரியமான ஒன்றுதான். 

இன்-ஸ்விங் யார்க்கர், அவுட்-ஸ்விங் யார்க்கர், ஸ்லொவ்-யார்க்கர், வைட்- யார்க்கர், ஃபாஸ்ட் பவுன்சர்கள், பேட்ஸ்மேன் நகர்வை பொறுத்து அவரை நோக்கி வீசுதல், பேட்ஸ்மேனை திணறடிக்கும் இன்-ஸ்விங் & அவுட்-ஸ்விங், ஸ்லோவ் பால் என பும்ராவின் பவுலிங் பல நுணுக்கங்களை கொண்டுள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் பும்ரா தான். அவரது பவுலிங் மிகவும் சிறப்பானது. அவரின் மிகச்சிறந்த பவுலிங் இனிமேல் தான் வெளிப்படும் என முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு தெரிவித்திருந்தார்.

ஒரு பவுலர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்குவது அரிதான ஒன்று. 2009-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் கும்ப்ளே தனது சிறந்த பவுலிங் மூலம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் தனது மாஸ் பவுலிங் மூலம் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் பும்ரா. 

பெரும்பாலும் டெத் ஓவரில் பவுலிங் செய்யும் எந்த வீரரும் சற்று பதட்டமாகவே இருப்பார்கள். ஆனால் பும்ரா டெத் ஓவரில் சிரித்த முகத்துடனும், நிதானமாகவும் பவுலிங் செய்கிறார்.  
 

john wright man who introduced jasprit bumrah in ipl

 

இந்த ஓவரை எப்படி சிறப்பாக வீச வேண்டும் என்பதை விட இந்த பந்தை எவ்வாறு சிறப்பாக வீச முடியும் என்ற எண்ணமே ஒவ்வொரு பந்தையும் துல்லியமாக வீசுவதற்கு உதவியாக உள்ளது. டெத் ஓவரில் நிதானமாக பவுலிங் செய்வதற்கு இதுதான் காரணம் என்று பும்ரா ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவில் குறிப்பிட்டிருந்தார். 

சமீபத்தில் ஐஐடி-கான்பூர் பேராசிரியர் சஞ்சய் மிட்டல், பும்ரா பவுலிங்கின் வெற்றி ரகசியம் குறித்து கூறியிருந்தார். பும்ரா பவுலிங்கின் வேகம், பவுலிங் ஸ்டைல், பவுலிங் செய்யும்போதுள்ள அவரின் உடல் அசைவு, பந்து சுழலும் விதம் ஆகியவை சேர்ந்து மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது. பந்தை கீழ் நோக்கி அழுத்தமாக பிட்சில் வீசும்போது பந்து துல்லியமாக முடுக்கிவிடப்பட்டு பேட்ஸ்மேன்களால் சரியாக கணிக்க முடியாமல் போகிறது. சில சமயம் திடீர் பவுன்சர்களும் இதனால் தான் ஏற்படுகின்றன என மிட்டல் விவரித்திருந்தார். 

2018 ஜனவரி மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 591 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார். 2017 ஜனவரி மாதத்திற்கு பின் ஒருநாள் போட்டிகளில் டெத் ஓவர்களில் 37 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் பும்ரா. இந்திய அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் இருந்தபோது இந்திய அணி பல சாதனைகளை படைத்தது. கங்குலி மற்றும் ஜான் ரைட் இந்திய அணியை கட்டமைத்தனர். பிறகு பும்ரா எனும் அபூர்வ பவுலரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இந்திய அணிக்கும் பெரிதும் உதவியுள்ளார் ஜான் ரைட்.

 


 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.