Skip to main content

தொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

அன்பு காட்டுவதும், பரிவு காட்டுவதும் ஒருவரின் வெற்றியை உறுதிப்படுத்தும். மனிதர்களை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே நல்ல செயல்களைச் செய்ய முடிகிறது. அவ்வாறு நேசிக்கத் தவறினால் அவர்களின் செயல்கள் முரட்டுத்தனமானதாகவே அமைகிறது. அது விரும்பும் வெற்றியை ஈட்டித்தராது.அமைதி விரும்பியான ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருமுறை நடந்து போய்க் கொண்டிருந்தார்.  அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அவரிடம் தர்மம் போடுமாறு கேட்டுக் கொண்டான்.மனித நேயமிக்கவர் டால்ஸ்டாய். அன்பும், பரிவும், நேசமும் அதிகம் உடைய உத்தமர் அவர்.எனவே பிச்சைக்காரனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார். தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்துத் துழாவினார்.

lion with doctor

துரதிர்ஷ்டவசமாக ஒரு காசு கூட சிக்கவில்லை. மனம் வலித்தது. பிச்சைக்காரனைப் பார்த்து, தம்பி, என்னிடம் பணம் எதுவும் இல்லையேப்பா என்று பரிவோடு கூறினார் டால்ஸ்டாய். காசு இல்லை என்றாலும் அவர் தம்பி என்று அவனைப் பாசத்தோடு அழைத்தது அவனை மகிழ்ச்சியுறச் செய்தது. பசியால் வாடிப்போயிருந்த அவனது முகம் மலர்ச்சி அடைந்தது. பிரகாசித்தது. ஐயா! பிச்சைக் கொடுப்பதைக் காட்டிலும் சந்தோஷமான ஒன்றை எனக்குக் கொடுத்து விட்டீர்கள். எல்லோரும் என்னை போடா.. வாடா.. என்று மரியாதை இல்லாமல் கீழ்த்தரமாக அழைக்கும்போது நீங்கள் தம்பி என்று சகோதரப் பாசத்துடன் அழைத்து எனக்குக் கௌரவம் தந்திருக்கிறீர்கள். என்னைப் பாசக்காரனாக்கி உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இணைத்திருக்கிறீர்கள். இது ஒன்றே எனக்குப் போதும்  என்று அகமகிழ்ந்து கூறினான் பிச்சைக்காரன்.பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி பரிவில் கிடைத்திருக்கிறது.இதுதான் அன்பின் அடையாளம். இதுதான் பரிவின் பண்பு. இதுதான் பாசத்தின் தன்மை. ஏழை எளியவர்கள் பணத்தை விடவும், செல்வத்தை விடவும், செல்வாக்கை விடவும், புகழை விடவும் பரிவையும், பாசத்தையுமே அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அதனை வழங்குகிறபோது அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியை அடைகிறார்கள்.

அண்மையில் இணைய தளத்தில் பார்த்த ஒரு வீடியோ காட்சி மனதைத் தொட்டது. சிங்கம் எத்தனை கொடிய விலங்கு என்பது நமக்குத் தெரியும். அதன் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அது மிகவும் கஷ்டப் பட்டு வந்தது. நடக்க முடியவில்லை. வலி வேறு.இந்நிலையில் மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த மிருக டாக்டர் ஒருவர் அந்த சிங்கம் அவதிப்படுவதைப் பார்த்தார். அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். பின்னர் மிருகக்காட்சி அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று சிங்கத்திற்கு சிகிச்சை அளித்தார். விரைவில் சிங்கத்திற்குக் குணமாகியது. அதன் வலி சுத்தமாக மறைந்து போயிற்று. பழைய மாதிரி நன்றாக, கம்பீரமாக அதனால் நடக்க முடிந்தது. சிங்கத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இந்நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த மருத்துவர் மிருகக் காட்சி சாலைக்கு வந்தார். கம்பி வேலிக்குள் கம்பீரமாக உலா வந்த அந்த சிங்கத்தைப் பார்த்தார். அவருக்கு சந்தோஷமாக இருந்தது. சற்று தொலைவில் நின்றிருந்த சிங்கம் வெளியே டாக்டர் நிற்பதைப் பார்த்தது. தீராத நோயைக் குணமாக்கி மீண்டும் வலியற்ற நடையைத் தந்தவர் என்ற நன்றி விசுவாசம் அதனுள் துளிர்த்தது. அங்கிருந்து சந்தோஷமாக ஓடிவந்த சிங்கம் கம்பி வேலி வழியாகத் தனது முன்னங்கால்களை நீட்டி டாக்டரைத் தொட்டுத் தழுவியது. அத்துடன் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு டாக்டரின் தலை, முகம், உடம்பு, கை என்று அனைத்து பாகங்களிலும் முத்த மழையைப் பொழிந்து தள்ளிவிட்டது. அங்கிருந்த பார்வையாளர்கள் பலரும் இந்த அரிய காட்சியைக் கண்டு அப்படியே அடித்து வைத்த கற்சிலைபோல ஆகிவிட்டனர். இது அண்மையில் நடந்த உண்மை நிகழ்ச்சி. யோசித்துப் பாருங்கள். கொடிய மிருகமாக இருந்தாலும் பரிவு காட்டினால் அதற்கு நன்றியாகப் பாசத்தைப் பொழிகிறது. இது இயற்கையின் நியதி.அனைத்து உயிர்களிடத்திலும் பரிவு காண்பித்தால் அதனால் கிடைக்கும் சந்தோஷங்கள் ஏராளம். கடை முதலாளி ஒருவர் வாழைக்குலை ஒன்றைத் தனது வேலைக்காரனிடம் கொடுத்து அருகிலுள்ள கோயிலில் தானமாகக் கொடுத்து வருமாறு கூறினார்