Skip to main content

திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்; பெண் கழுத்தை நெரித்துக் கொலை!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

woman passed away salem

 

சேலத்தில் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததால், ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் பெண்ணை துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஷெகனாஸ் (48) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த மாதேஸ்வரன் ஷெகனாஸுடன் தனியாக ஒரு வீட்டில் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினார்.

 

ஷெகனாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்த நிலையில்தான் மாதேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஷெகனாஸுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க, ஷெகனாஸுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மாதேஸ்வரன் அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் ஷெகனாஸ் அந்த இளைஞருடன் உறவைத் தொடர்ந்து வந்தார்.     

 

இதையடுத்து மார்ச் 18ம் தேதி ஷெகனாஸ் வீட்டுக்குச் சென்ற மாதேஸ்வரன் அவரை மீண்டும் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாதேஸ்வரன் ஷெகனாஸின் கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை தேடி வந்த நிலையில், அவரே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.