
'திமுக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் ஆசைதான் என்றாலும் அதுகுறித்து முடிவெடுப்பது தலைமைதான்' என மதிமுக திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசுகையில், 'நான் மதிமுகவின் முதன்மை செயலாளர். எனவே திமுக கூட்டணியில் அதிக சீட்டுகள் கேட்பது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. ஒரு இயக்கத்தை பொறுத்தவரை தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். கம்யூனிஸ்ட்காரர்கள், காங்கிரஸ்காரர்கள் அதிக சீட்டுகள் கேட்கிறார்கள் என்றால் அந்த இயக்கத்திற்கு உரிமை இருக்கிறது. அது தவறு கிடையாது. எந்த இயக்கமும் தாங்கள் வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இத்தோடு போதும் நினைப்பது கிடையாது.
மதிமுகவை பொறுத்தவரை எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருமே கூடுதல் எண்ணிக்கை சீட்டு வர வேண்டும், அங்கீகாரம் கிடைக்க வேண்டும் குறைந்தபட்சம் 12 சீட்டுகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆசை எங்களுக்கு இருக்கும். ஆனால் கூட்டணி என்று இருக்கும்போது, பல இயக்கங்கள், பல நெருக்கடிகள் கூட்டணி தலைமைக்கும் இருக்கும். ஒரு பொது நோக்கதிற்காக நாம் சேரும் போது அந்த நோக்கத்திற்கு பாதகம் வந்து விடக்கூடாது. கூட்டணியில் விரிசல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு சமரசம் ஏற்படும். எங்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது குறித்து முடிவெடுப்பது கட்சி தலைமை தான்.
கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட எல்லோருக்கும் இருப்பதை போல் எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு முதன்மைச் செயலாளராக எத்தனை சீட்டுகள் வேண்டும் என எதிர்பார்ப்பது ஒரு முதிர்ச்சியான பதிலாக இருக்காது. நான் சொல்லவும் கூடாது. இயக்கத்தின் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் விருப்பத்தை தலைமையிடம் சொல்வோம். ஆனால் பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்ல முடியாது. மற்ற இயக்கங்களில் அப்படி நடக்கலாம். மதிமுக என்பது கட்டுப்பாடுடைய ஒரு இயக்கம். தலைமை சொல்வது படி இயங்கும் ஒரு இயக்கம். பொதுக்குழு நடக்கும் பொழுது எங்களுடைய கருத்துக்களை தலைமையிடம் சொல்வோம்' என்றார்.