
கடம்பூரில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 லிட்டர் அளவுள்ள சாராய ஊரல் அழிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடம்பூர் மலைப்பகுதி சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் அதிக அளவில் சாராயம் புழக்கம் இருப்பதால் அங்கு தீவிர சோதனை ஈடுபட்டனர். கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடம்பூர், இரட்டிப்பாளையம், திகினாரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக வைத்திருந்த 3 லிட்டர் சாராயம், மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் பால் கேன்கள், ஒரு பெயிண்ட் டப்பாவில் இருந்த 45 லிட்டர் அளவுள்ள சாராய ஊரல் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (53), குமார் (53) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சாராயத்தையும் சாராய ஊரலையும் போலீசார் கொட்டி அழித்தனர்.