Skip to main content

விக்னேஷ் மரணம்... காவலர்கள் இருவர் கைது!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Vignesh issue... Two policemen arrested!

 

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த மாதம் 18ஆம் தேதி நள்ளிரவு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு விக்னேஷ் இறந்ததாக தெரிகிறது. விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது சகோதரர் குற்றம்சாட்டி வந்தார்.

 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியாகி இருந்தது. அதன்படி, விக்னேஷின் உடலில் 13 இடங்களில் பலவிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தலையில் ஒரு அங்குலத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இடது கை, மூக்கின் வலதுபக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதுகு மற்றும் இடுப்பில் சிராய்ப்பு காயங்கள் உள்ளது. லத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிய ஆதாரங்களும் உடலில் காணப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 12 காவலர்களிடம் சுமார் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்