
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (19.06.2025) சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அவர் கோயில் மண்டபம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தம்பதியினர் அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது அவர்களது செல்போனை வாங்கிய தொல். திருமாவளவன் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “திருப்பரங்குன்றத்தில் நெற்றியில் உள்ள திருநீரை நீங்கள் அழிப்பது போலக் காட்சி வந்திருந்தது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “திருநீரை வச்சிட்டு தான் நான் வந்தேன். அது அரை மணி நேரம் என் நெற்றியில் இருந்தது. அரை மணி நேரம் இருந்ததை யாரும் இன்னைக்கு பாக்கலையே. நாள் முழுவதும் நான் வச்சுக்கிட்டு இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.